உண்மைகளை ஒளிக்காத சிலை கடத்தல் சினிமா - ‘களவுத் தொழிற்சாலை’ இயக்குநர் கிருஷ்ணசாமி நேர்காணல்

By திரை பாரதி

ர்வதேச சிலை கடத்தல் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்ட ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம் இந்த வாரம் வெளிவருகிறது. சிலை கடத்தலில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பது போல் இப்படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் விவகாரங்களில் பல கேள்விகளை உருவாக்கி யிருக்கும் இத்திரைப்படம் குறித்து இயக்குநர் டி.கிருஷ்ணசாமியுடன் ஒரு நேர்காணல்..

‘களவுத் தொழிற்சாலை’ கதை உருவானது எப்படி?

திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘கிரைம் டைரி’ நிகழ்ச்சிக்காக காவல் அதிகாரியின் வீடியோ பேட்டியை கொடுத்து அதை ஸ்கிரிப்ட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு சொன்னார்கள். தமிழகத்தில் இருந்து காணாமல்போன விலைமதிக்கமுடியாத மரகதலிங்கத்தை மீட்டுக் கொண்டு வந்ததை அந்த அதிகாரி பேட்டியாக கொடுத்திருந்தார்.

அதன்மூலம் புராதனமான நம் கோயில்களின் பெருமை, சிலைகளின் சக்தி பற்றி தெரிந்தது. அந்த பேட்டிக்குள் ஒரு திரைக்கதை ஒளிந்திருப்பதாக உணர்ந்தேன். பின்னர் இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் பணியாற்றியபோது, பழமையான பல கோயில்களுக்குச் சென்று பார்த்தேன். இங்கு பிரபலமான புராதன கோயில்களில்கூட நம் பொக்கிஷங்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று புரிந்தது. அந்தப் பயணத்தின் முடிவில் எழுதியதுதான் ‘களவுத் தொழிற்சாலை’ திரைக்கதை.

சிலை கடத்தலில் காவல் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக படத்தின் டிரெய்லரில் வந்தது. நிஜத்திலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாரே?

உண்மையில், எந்த அதிகாரியின் பேட்டி இப்படத்தின் கதைக்கு உந்துதலாக இருந்ததோ, அவர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். படத்தை எடுத்து முடித்த பிறகு, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். அவரது நெருங்கிய கூட்டாளி என்று கருதப்படும் தீனதயாள், படத்தின் பின்னணி இசைக்கோப்பு வேலைகள் நடந்தபோது கைது செய்யப்பட்டார். இவை அனைத்தும் எதேச்சையாக நடந்ததுதான். இவர்கள் மட்டுமல்லாமல், நிஜ நபர்களை பிரதிபலிக்கும் வேறு சில கதாபாத்திரங்களும் படத்தில் இருக்கின்றன. இது எப்படி அமைந்தது என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

சிலை கடத்தல் கதையை படமாக்கு வது சவாலாக இருந்திருக்குமே?

உலக அளவில் போதைப் பொருள், வைரம் கடத்தலுக்கு அடுத்து, அதிக பணம் புரளும் நிழல்உலகத் தொழில் சிலை கடத்தல். ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி புரள்வதாக புள்ளிவிவரம் இருக்கிறது. கதையைக் கேட்ட பலரும் இக்கதை சென்சாரில் தப்பிக்காது என்று எச்சரித்தனர். சமூக பொறுப்புடன் கூடிய படைப்பு என்பதால், நம்பிக்கையுடன் போராடி பல தலங்களில் படம்பிடித்தேன். ஒரு நெகட்டிவ் கதை களத்தில் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளே பல விறு விறுப்பான காட்சிகளுக்கும், பல அதிரடி திருப்பங்களுக்கும் களமாக அமைந்தன. இப்படித்தான் சிலைகள் கடத்தபடுகிறதா என்பதை ரசிகர்கள் அறியும்போது ஆடிப்போவார்கள்.

வன்முறை செய்யாமல், ஆயுதங்களைத் தொடாமல் காய்களை நகர்த்தி பொக்கிஷத்தை நெருங்கும் சர்வதேச கடத்தல்காரன், அவனுக்கு துணைபோகும் கிராமத்து அப்பாவி, அவனை நேசித்தாலும் அவனது செயலைக் கண்டிக்கும் காதலி, திரைக்கதையில் அதிரடியாக நுழையும் காவல்துறை அதிகாரி.. என்று விறுவிறுப்பாக சஸ்பென்ஸ், காதல், பொழுதுபோக்கு கலந்த படமாக உருவாக்கியிருக்கிறேன். தனது ஒளிப்பதிவின் நுணுக்கத்தால் படத்தை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் தியாகராஜன்.

தமிழக கோயில்களில் படப் பிடிப்பு நடத்த அரசு தடை விதித்துள்ளதால், கோயில்களில் படமாக்கப்பட்ட கடைசி திரைப்படம் என்ற சிறப்பும் இப்படத்துக்கு உண்டு.

19ChREL_T Krishnaswamy இயக்குநர் டி.கிருஷ்ணசாமி இயக்குநர் ஷங்கரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பிரம்மாண்டத்துக்குப் பெயர்பெற்றவர் ஷங்கர் சார். நான் ஒளிக்கமுடியாத உண்மையை பிரம்மாண்டம் என நம்புகிறவன். உண்மைக் கதை, பொழுதுபோக்கு, விறுவிறுப்பு இருக்கும்போது பிரம்மாண்டங்கள் தேவையில்லை. அதை இப்படத்தில் முயன்றிருக் கிறேன்.

படக்குழுவும், படத்தை வெளியிடும் எம்ஜிகே மூவிமேக்கர் ரவிசங்கரும் கடும் உழைப்பைத் தந்து எனக்கு கைகொடுத்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்