மாறாத ரங்கநாதன் தெரு நிலை: இயக்குநர் வசந்தபாலன் வேதனை

By செய்திப்பிரிவு

இன்னும் மாறாத ரங்கநாதன் தெரு நிலைத் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் வேதனை தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, ஏ.வெங்கடேஷ், பாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அங்காடித் தெரு'. 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ளவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவானது. அங்குள்ள துணிக்கடைகளில் பணிபுரிபவர்கள் எந்தளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, மேலாளர்களால் படும் அவதி என பல்வேறு விஷயங்களை 'அங்காடித் தெரு' பேசியது. பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.

'அங்காடித் தெரு' படத்துக்குப் பிறகு, துணிக்கடையில் பணிபுரிபவர்கள் மீதான பார்வையே முழுமையாக மாறியது. அந்தப் படத்துக்குப் பிறகு தனது புதிய படத்துக்காக ரங்கநாதன் தெருவுக்குச் சென்றுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இன்னும் அந்த தெருவில் இருப்பவர்களின் நிலை மாறவில்லை என்ற ஆதங்கத்தை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.

ரங்கநாதன் தெரு நிலைத் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 வருடங்களுக்குப் பிறகு பழைய காதலியைப் பார்க்கச் செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன்.

அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்துத் தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது. வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும் சமோசா விற்கும் பெரியவரையும் கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன்.

மனம் 'அங்காடித்தெரு' சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு ஜெயில் வெளியீடு பற்றி விசாரித்தார்கள். ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்குச் சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார்.

வசவு சொற்களைக் கேட்கச் சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். "கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா" என்ற 'அங்காடித்தெரு' பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது”

இவ்வாறு வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்