'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தைப் பார்த்து நடிகர் கமல்ஹாசன் எப்படி ஆச்சரியப்பட்டார் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் கூறியுள்ளார்.
'ஆரண்ய காண்டம்' வெளியாகி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வெளியீட்டின்போது வெற்றி பெறாமல் பின்னர் மக்களால் கொண்டாட்டப்பட்ட திரைப்படங்களில் ஆரண்ய காண்டத்துக்கும் ஒரு இடமுண்டு. இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடலே தெற்காசிய சர்வதேசத் திரைப்பட விழாவில்தான் நடந்தது. அங்கு சிறந்த திரைப்படம் என்ற கிராண்ட் ஜூரி விருதைப் பெற்றது.
வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது. இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தேசிய கவனம் பெற்றார்.
அண்மையில் நானும் கமலும் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடும் இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம் அவரது மகன் எஸ்பிபி சரண் கலந்துகொண்டு பாடினார். கமல்ஹாசன் - எஸ்பிபி இணையின் பிரபலமான பாடல்கள் இதில் பாடப்பட்டன.
'ஆரண்ய காண்டம்' படத்தின் தணிக்கையின் போது, படத்தில் வரும் ஒரு வசனத்துக்காக, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இருவரிடமும் NOC என்று சொல்லப்படும் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணிடம் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
"நாங்கள் முதலில் சான்றிதழ் விவரத்தைப் பற்றி கமல் சாரிடம் கூறவில்லை. இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறோம், வந்து பார்க்க முடியுமா என்று கேட்டோம். அவரும் வந்து பார்த்தார். வியந்து போனார். 'இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கெட்ட வார்த்தைகள், வன்முறை கதைக்குத் தேவையென்றால் அவற்றையெல்லாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. இதுதான் தமிழ் சினிமாவின் புதிய ஆரம்பம்' என்கிற ரீதியில் எங்கள் அனைவரையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். படத்தில் நடித்த குரு சோமசுந்தரம், மாஸ்டர் வசந்த் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தயங்கித் தயங்கி அவரிடம் இந்தத் தடையில்லாச் சான்றிதழ் விவரத்தைப் பற்றிச் சொன்னோம். எதற்கு என்று கேட்டார். அந்த ஒரு வசனதுக்கு என்றதுமே 'என்ன முட்டாள்தனம் இது. யாரிடம் வேண்டுமானாலும் நான் வந்து பேசுகிறேன்' என்றார். ரஜினியிடமும் வாங்க வேண்டும் என்று சொன்னதற்கு, 'அதெல்லாம் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள்' என்று முழு ஆதரவு தந்தார்" என்று எஸ்பிபி சரண் நினைவுகூர்ந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
கருத்துப் பேழை
44 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
28 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 mins ago