இப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன். நடுவில் வந்தேன், நடுவிலேயே விலகிப் போய்விடுகிறேன் என்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் கடும் சர்ச்சைக்கு இடையே பீட்டர் பாலை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. தற்போது வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இருவருக்கும் பிரச்சினை எனவும் பிரிந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
''காலையில் நிறைய ட்வீட்கள் போட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து பலரும் அன்புடன் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள், குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள். விரக்தியின் உச்சத்தில் நான் இருக்கிறேன் என்பது புரிந்துள்ளது. ஆனால், அந்தப் பதிவுகளில் எதையும் நான் தெளிவாகச் சொல்லவில்லை.
பீட்டர் பாலை எதிர்த்து நின்றவர்கள் அனைவரது வாயையும் அடைக்க வேண்டும் என்று இந்த உலகத்தையே எதிர்த்து நின்றுள்ளேன். எனக்கும் பீட்டர் பாலுக்கும் கடந்த சில நாட்களாக பிரச்சினைகள் போய்க் கொண்டிருப்பது உண்மைதான். நான் அவரைச் சந்திக்கும்போது தனியாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அலுவலகம், தங்கியிருந்த வீடு ஆகியவற்றுக்குச் சென்றுள்ளேன். தனியாகத் தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு நட்பை மீறி பழக ஆரம்பித்தேன். திருமணம் செய்துகொள்ளலாம் என்று என்னிடம் கேட்டபோது, இன்னொரு திருமணம் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் விசாரிக்க எல்லாம் இல்லை.
எனது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பலரும் என்னை அவதூறு வார்த்தைகளால் திட்டியிருந்தார்கள். அவற்றைப் பார்த்தேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்தேன். இப்போது வரை எனது பழைய கணவர்களுடன் நல்ல நட்பில்தான் இருக்கிறேன். இன்னொரு திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம்தான் இந்தக் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்தது. பீட்டர் பாலுக்கு விவாகரத்தான விஷயம் தெரியாது. அவருடைய மனைவி புகார் கொடுத்து, பிரச்சினை உருவாக்க வேண்டும் என்றுதான் செய்தார். பணத்துக்காக பீட்டர் பாலைத் திருமணம் செய்திருந்தால் அவரைப் பற்றி முழு விவரங்களையும் எடுத்திருப்பேன். ஜூன் 26-ம் தேதி பீட்டர் பாலின் மனைவியிடம் பேச முயற்சி செய்தேன். அவர் என்னிடம் பேசவில்லை. நான் ஏதோ அவர்களுடைய குடும்பத்தை உடைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள்.
முதலில் பீட்டர் பாலுக்கும் எனக்கும் நடந்தது திருமணமே கிடையாது. அதுவொரு நிச்சயதார்த்தம். முதல் மனைவி பிரச்சினைக்குப் பிறகு விவகாரத்து எல்லாம் வாங்கிட்டு வாங்க, திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். அதே வேளையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவருடைய அப்பாவோ, மகனோ துணைக்கு இருந்தால் பெரிய தெம்பு. பீட்டர் பாலுடன் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல், ரொம்பவே என்னை அன்புடன் கவனித்துக் கொண்டார். எங்கள் இருவருக்குமே நிறைய பிரச்சினைகள் வந்தன. அதை எல்லாம் இருவருமே மனரீதியாகப் போராடி கடந்து வந்தோம்.
என்னுடன் இருக்கும் வரை மது அருந்தாமல்தான் வாழ்ந்து வந்தார். ஆனால், சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். மீடியாக்களில் தப்பு தப்பாக செய்திகள் எல்லாம் பார்த்தவுடன் அவருக்கு மன அழுத்தம் அதிகமானது. ஆகையால் நிறைய சிகரெட் பிடிக்கத் தொடங்கினார். என் முன்னால் அல்ல, அலுவலகம் சென்றவுடன்தான். அவருக்கு நெஞ்சு வலி வந்தது. அந்தச் சமயத்தில் நான் அடைந்த திகில் இதுவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. ஒரு பெரிய அறுவை சிகிச்சையாக இருந்திருக்க வேண்டியது. சின்ன ஸ்டண்ட் மூலமாக காப்பாற்றப்பட்டார். மீண்டும் அலுவலகம் போகத் தொடங்கிய போது, அவரால் சிகரெட்டை விட முடியவில்லை. ஏனென்றால், அதற்கு அடிமையாகிவிட்டார் எனப் புரிந்தது. சிகரெட்டை விட நான் அவருக்கு முக்கியமாகப் படுவேன் என நினைத்தேன்.
15 நாட்கள் கழித்து வீட்டில் கடுமையாக இருமத் தொடங்கினார். முழுமையாகச் செலவு செய்து அவரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தேன். உலகத்தையே உங்களுக்காக எதிர்த்து நின்றேன். இனிமேல் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று காலில் விழுந்து கெஞ்சினேன். இறப்பைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன் என்றார். ஆகையால் இனி ஒழுங்காக இருப்பார் என நம்பினேன்.
அதற்குப் பிறகு அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கண்காணிக்கத் தொடங்கினேன். அப்போது 2-3 முறை கையும் களமாகாக சிகரெட் பிடித்து சிக்கிக் கொண்டார். என்னை விட சிகரெட் முக்கியமாக போய்விட்டதா என்று கேட்டேன். இல்லமா, நான் விட்டுட்டேன் என்று பொய் சொல்லத் தொடங்கிவிட்டார். எதற்கெடுத்தாலும் பொய் சொல்ல ஆரம்பித்தார். மன அழுத்தம் காரணமாக இப்படிச் செய்கிறாரோ என நினைத்து கோவாவுக்கு ட்ரிப் சென்றோம். அங்கு போய் தொடர்ச்சியாக வீடியோக்கள் செய்து கொண்டிருந்தோம்.
கோவாவிலிருந்து கிளம்பும்போது அவருடைய அண்ணனுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை என்று போன் செய்து சொன்னார்கள். அப்போது உடைமைகளை எல்லாம் பேக் செய்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் முழுமையாக குடித்துவிட்டு வந்தார். அப்போது இருவருக்கும் சண்டையாகிவிட்டது. உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா எனக் கேட்டேன். எங்க அண்ணன் என்னை வளர்த்தவர், அவர் சீரியஸாக இருப்பதால்தான் என உளறினார். உடனே, அவரைக் காரில் உட்கார வைத்து நானே வண்டி ஒட்டிக் கொண்டு சென்னை வந்தேன். காலை 8 மணி வீட்டுக்கு வந்தோம்.
அதற்குப் பிறகு அவரைக் காணோம். போன் செய்தாலும் எடுக்கவில்லை. வீட்டிற்கு வந்தால் கட்டுப்படுத்துவார்கள் என நினைத்துவிட்டார். மீண்டும் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துவிட்டதால் மீண்டும் குடிக்கு அடிமையாகி முழுக்க குடி, சிகரெட் என இறங்கினார். நிறைய சினிமா கம்பெனிகளில் எல்லாம் பணம் கேட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் எனக்கு போன் செய்தார்கள். கடந்த ஒருவாரமாக அவரைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வருவதற்கு போதும் போது என ஆகிவிட்டது. ஒரு நாள் காலையில் 4 மணிக்குப் பிடித்தோம். அங்கிருந்து மீண்டும் ஓடிவிட்டார்.
ஒரு கட்டத்தில் அவருடைய அண்ணன் இறந்துவிட்டார். போய் வாருங்கள் எனச் செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பினேன். அவரோ அங்கு போகவே இல்லை. அடுத்த நாள் குடித்துவிட்டுச் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றவர், இங்கு வரவே இல்லை. மீண்டும் தேடத் தொடங்கினேன்.
உண்மையில், என்னை விட அவருக்குப் போதைப் பழக்கம்தான் முக்கியம் எனத் தெரிந்தவுடன் மனம் உடைந்துவிட்டது. அனைத்து விஷயங்களிலுமே முட்டாளாக ஏமாந்து போய் நிற்கிறேன். சொந்தக் காலில் நின்று பீட்டர் பாலையும், என் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் எனத் தவறான முடிவுகள் எடுக்க மாட்டேன். திட்டுகிறீர்களோ, பாராட்டுகிறீர்களோ ஏதோ ஒரு விஷயத்தில் அக்கறை இருப்பதால்தான் பேசுகிறீர்கள். இப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன், பயமாக இருக்கிறது. அவருக்கு ஏதேனும் ஒன்றால் என்னைத் தான் குற்றம் சொல்ல வருவார்கள், பரவாயில்லை.
இந்த ஒரு வருடம் அவர் என்னைச் சந்தித்தது, என்னை அவர் சந்தித்ததும் ஒரு காரணமாகத்தான் என எடுத்துக் கொள்கிறேன். என் காதல் உண்மை, தோற்றுவிட்டேன். திருமணத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கை தொடரும். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டுதான் இருப்பேன். ஒரு பெண்ணாக காயப்பட்டுவிட்டேன். என் குழந்தைகளால் வலுவாக மீண்டும் வருவேன். அவர் மருத்துவமனையில் இருக்கும் போது எலிசபெத்துக்குப் பலமுறை போன் செய்தேன். அவருடைய வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. மீண்டும் அவரோடு தாராளமாக வாழுங்கள். நடுவில் வந்தேன், நடுவிலேயே விலகிப் போய்விடுகிறேன். நன்றி''.
இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
58 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago