பல வருடங்கள் என் குரலாக இருந்திருக்கிறீர்கள்; உங்கள் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ரஜினி உருக்கம்

By செய்திப்பிரிவு

பல வருடங்கள் என் குரலாக இருந்திருக்கிறீர்கள், உங்கள் இழப்பைக் கண்டிப்பாக உணர்வேன் என்று எஸ்பிபி மறைவுக்கு ரஜினி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து ரஜினி தனது ட்விட்டர் பதிவில் "உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பாலு சார். பல வருடங்கள் என் குரலாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் குரலும், உங்கள் நினைவும் என்றும் என்னுடன் வாழ்வும். உங்கள் இழப்பை நான் கண்டிப்பாக உணர்வேன்" என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி பேசியிருப்பதாவது:

"இன்று மிகவும் சோகமான நாள். கடைசி வரை உயிருக்காகப் போராடி, எஸ்பிபி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த நாள். அவரது பிரிவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எஸ்பிபியின் குரலையும், பாடல்களையும் ரசிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்.

அவரைத் தெரிந்தவர்கள் அவரது குரலையும், பாடல்களையும் தாண்டி அவரை அதிகமாக நேசித்தார்கள். அதற்குக் காரணம் அவரது மனிதநேயம். சிறியவர்கள் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரையும் எஸ்பிபி மதித்தார். கௌரவம் கொடுத்தார், அன்பு கொடுத்தார். அவ்வளவு அருமையான, அன்பான ஒரு மனிதர்.

இந்தியத் திரையுலகம் எத்தனையோ பெரிய பாடகர்களை உருவாக்கியுள்ளது. முகமது ரஃபி, கிஷோர் குமார், கண்டசாலா, டிஎம் சவுந்தர்ராஜன், என பல உயர்ந்த பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு நம் எஸ்பிபி அவர்களுக்கு உள்ளது. அது என்னவென்றால், அவர்கள் எல்லோருமே அந்தந்த மொழியில் மட்டுமே பாடினார்கள்.

ஆனால் எஸ்பிபி பல மொழிகளில் பாடியிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் பரிச்சயமானவர். முக்கியமாகத் தென்னிந்தியாவில் அவருக்கு ரசிகர் இல்லையென்று யாரும் இல்லை. அவரை அவ்வளவு ரசித்தார்கள்.

அவரது இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நம்மிடையே, நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்தக் குரலின் உரிமையாளர் நம்மிடையே இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மிகப்பெரிய ஆன்மா, மிகப்பெரிய பாடகர், மிகப்பெரிய மகான். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி, வணக்கம்"

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்

ரஜினிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் எஸ்பிபி. ரஜினி படங்களில் மிகவும் பிரபலமான அவருடைய அறிமுகப் பாடல்களைப் பல படங்களில் பாடியவர் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்