4 முன்னணி இயக்குநர்கள் இணைந்து காதலை மையப்படுத்தி 'குட்டி லவ் ஸ்டோரி' என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே முதலில் தமிழக அரசு அனுமதியளித்தது. தற்போது நேற்று (செப்டம்பர் 1) முதல் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டாலும், எந்தவொரு முன்னணி நடிகரின் படமும் தொடங்கப்படவில்லை.
இதனிடையே, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம், 4 முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்து வருகிறது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'குட்டி லவ் ஸ்டோரி' என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் உள்ள 4 கதைகளை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப் படம் தொடர்பான ப்ரமோ வேல்ஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருப்பதாவது:
"எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள்தான். அப்படியான ஒரு காதல் கதையைத் தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இந்தப் படம் அமைந்திருப்பது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
ஒரு ரசிகனாக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோரின் படங்கள் எந்த வகை ஜானராக இருந்தாலும் அதில் வெளிப்படும் கவிதைத் தன்மையையும், காட்சித் தொகுப்பையும், மிளிரும் உணர்வுக் குவியல்களையும் ரசித்திருக்கிறேன்.
இவர்களுடன் இணைந்து இப்படைப்பில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக விரைவில் படத்தில் பங்கேற்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம்".
இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் இயக்குநர்களுடன் தனித்தனி படைப்புகளில் பணிபுரிவீர்களா என்ற கேள்விக்கு, ஐசரி கணேஷ் பதில் அளிக்கையில், ''படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ் சினிமாவைத் தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்துச் சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன் தனித்தனியாகப் படங்களில் பணிபுரிய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறது.
ஏற்கெனவே இக்குழுவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்க “ஜோஷ்வா இமைபோல் காக்க” திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இன்னும் ஆச்சர்யப்படுத்த்தும் படைப்புகள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago