'இராவண கோட்டம்' தாமதம் ஏன்? மீண்டும் எப்போது படப்பிடிப்பு? - படக்குழுவினர் விளக்கம்

By செய்திப்பிரிவு

'இராவண கோட்டம்' படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஏன், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களைத் தெரிவித்துள்ளது படக்குழு.

'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 6 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் அதன் முதற்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.

பின்பு 'வானம் கொட்டட்டும்', 'மாஸ்டர்' என இதர படங்களில் பிஸியானார் சாந்தனு. இதனால் 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. தற்போது 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியிருப்பதாவது:

"கடந்த ஆண்டே 'இராவண கோட்டம்' படத்தை ஆரம்பித்து விட்டோம். ஆண்டுக்கு மூன்று மாதங்களே இருக்கும் கடுமையான கோடை கால சூழலில் முழுக் கதையும் நடைபெறும் வகையில் படத்தின் களம் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியபோது மிகவும் சாதகமான தட்ப வெட்ப சூழலே நிலவியதால் மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம்.

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகிவிடக்கூடாது என்பதிலும், படத்தின் உள்ளார்ந்த சாராம்சத்தைச் சிதைத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். ஆயினும் இந்த ஆண்டு இதே பருவத்தில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டிருந்தபோது, உலகையே நிலைகுலையச் செய்த 'கோவிட் 19' பெருந்தொற்றால் அது முடியாமல் போனது.

தற்போதைய வியாபார சூழலை நான் நன்கு அறிந்திருக்கிறேன் என்றாலும், ஷாந்தனு மற்றும் விக்ரம் சுகுமாரன் திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக இந்தப் படத்தில் முதலீடு செய்து, படத்தை எடுக்க இருக்கிறேன். சுமுகமான சூழல் ஏற்பட்ட பிறகு அரசின் அனுமதி கிடைத்ததும், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் படப்பிடிப்பைத் தொடரவிருக்கிறோம்"

இவ்வாறு கண்ணன் ரவி தெரிவித்துள்ளார்.

'இராவண கோட்டம்' குறித்து சாந்தனு கூறியிருப்பதாவது:

"பல ஆண்டுகளாக எங்கள் குடும்ப நண்பராக இருக்கும் கண்ணன் ரவி, எனது வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு எனக்காகப் பிரார்த்தனை செய்பவர். பெரிய தொழில் முனைவோரான அவருக்கு, சினிமாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் எனக்கு ஒரு திருப்புமுனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 'இராவண கோட்டம்' படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும், பொறுமை காக்கும் அவர், எங்களிடம் "அவசரம் காட்ட வேண்டாம் சிறப்பான முறையில் படத்தை உருவாக்குங்கள்" என்றுதான் சொல்கிறார். தற்போது சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதி காத்து வருகிறோம்.

'இராவண கோட்டம்' படத்தைத் தொடங்கும்போது கண்ணன் ரவி சார் இனி உனக்கு நல்ல படவாய்ப்புகள் நிறைய வரும் என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே 'இராவண கோட்டம்' படம் வெளியாவதற்கு முன்பே, மணிரத்னம் சாரின் 'வானம் கொட்டட்டும்', விஜய் அண்ணாவின் 'மாஸ்டர்', மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் சில படங்கள் எனக்குக் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிக்கல் மிகுந்த இக்கட்டான சூழலிலும் கண்ணன் சார் எங்களுடன் இணக்கமாக இருப்பதற்கும், என் மீதும் விக்ரம் சுகுமாரன் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்"

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

சினிமா

57 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்