அஜித்துடன் 500 கி.மீ. பைக் பயணத்தின் சுவாரஸ்யங்கள்: சுஹைல் சந்தோக் பகிர்வு

By செய்திப்பிரிவு

'வீரம்' படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடனான பைக் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஹைல் சந்தோக் பகிர்ந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, சுஹைல் சந்தோக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வீரம்'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமே அஜித் - சிவா இருவரும் நட்பாகி தொடர்ச்சியாகப் படங்கள் பண்ணினார்கள்.

இந்தப் படத்தில் அஜித்துக்குத் தம்பியாக நடித்தவர்களில் ஒருவர் சுஹைல் சந்தோக். இவர் பைக் ரேஸ், கார் ரேஸில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரைச் சேர்ந்தவர். இவர் விளையாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 'வீரம்' படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் பைக் ஒட்டியது தொடர்பாக அளித்த பேட்டிகள் மற்றும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம்.

நேற்று (மே 1) அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சுஹைல் சந்தோக் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:

"என் நண்பர், ஊக்கம், உண்மையில் கனிவான இதயம் கொண்ட தல அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் அவருக்கு நல் ஆரோக்கியம் கிடைக்கட்டும். புன்னகையுடன் இருங்கள்.

சுப்பு வெங்கி, எனக்குப் பிடித்தமான பைக் பயணத்தைப் பற்றி பகிரச் சொல்லியிருக்கிறார். 2013 ஆம் ஆண்டு வீரம் படப்பிடிப்பின்போது அஜித்துடன் செய்த பைக் பயணம் கண்டிப்பாக எனக்குப் பிடித்தமான ஒன்று. நாங்கள் இருவரும் இரண்டு பைக்குகளில் 500 கி.மீ. வரை இணைந்து பயணம் செய்தோம். மொத்தப் பயண நேரத்திலும் ஹெல்மெட்டுக்குள் இண்டர்காம் வைத்துக் கொண்டு நாங்கள் பேசிக்கொண்டு வந்தோம்.

நம்மைப் போலவே விருப்பங்கள் கொண்ட ஒரு நண்பருடன் பயணப்பட்டதே ஒரு அற்புதமான அனுபவம். அதோடு நான் ஆதர்சமாகப் பார்க்கும் ஒருவரும் கூட. அவரிடமிருந்து வாழ்க்கை பற்றியும், சவால்களை எதிர்கொள்வது பற்றியும் என்னால் நிறையக் கற்க முடிந்திருக்கிறது.

எல்லாவற்றையும் விட தனது குடும்பத்தை மதிப்பாக நினைப்பவர் அவர். தான் சந்திக்கும் எல்லோரையும், தனக்குச் சமமாக அல்லது அதையும் விட மேலாக நடத்துபவர். அவர்கள் முக்கியமானவர்கள் என்பதை உணரவைத்துக் கொண்டே இருப்பார். இதை அவர் எந்த சிரமுமின்றி, அவர் மனதுக்குள்ளேயிருந்து வரும் உண்மையான அக்கறையின் மூலம் செய்வார்.

எங்கள் பயணத்தில் நாங்கள் சில இனிமையான மனிதர்களைச் சந்தித்தோம். அவரது உயிர் ரசிகர்கள் சில பேரால் காரில் துரத்தப்பட்டோம். செக்போஸ்ட்டில் அவரை அடையாளம் கொண்ட சில காவல்துறையினர் சிரித்தனர். இதோடு முக்கியமாக, ஒவ்வொரு ரசிகருக்கும் அவர் எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறார் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்தேன். தமிழ் சினிமாவில் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெரிந்தது.

அஜித் ஒரு தனிமை விரும்பி. அதனால் எப்போதுமே எங்கள் வீடியோக்களை நான் யாரிடமும் பகிர்ந்ததில்லை. ஆனால் அவரது பிறந்த நாள் அன்று அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால், எங்களது அற்புதப் பயணத்தின் சிறிய பகுதியை மட்டும் பகிர்கிறேன். இது சில அழகான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது".

இவ்வாறு சுஹைல் சந்தோக் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

33 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்