சென்னை
நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.
தரமணி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றவர் அருண்மொழி. 'அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் ருத்ரய்யாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 'ஏழாவது மனிதன்' (1982) படத்தில் இயக்குநர் ஹரிஹரனிடம் பணியாற்றினார். அப்படத்துக்கு வசனமும் எழுதினார்.
அதன் பின்னர் அவரே, நாசர், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, 'காணிநிலம்' (1987) 'ஏர்முனை' (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் அருண்மொழியின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் அயல்நாடுகளில் திரையிடப்பட்டன.
அருண்மொழி, நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிகத் திரைப்பட இயக்குநராக செயல்பட மனமின்றி இயங்கிவந்தார். எனினும் திரைப்படத்துறைக்கு ஆர்வத்தோடு வரும் இளைஞர்கள் பலருக்கும் திரைப்படத்தை சொல்லிக்கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்.
தாமிரபரணி மாஞ்சோலை தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூடு படுகொலை வழக்கு விசாரணை குறித்த Beware of commissions : 1998 சிறுதுளி, நிலமோசடி, தோழி ஆகிய ஆவணப்படங்களை இயக்கினார். மேலும், மக்கள் கவிஞர் இன்குலாப், கோவை ஞானி, ராஜம் கிருஷ்ணன், சாமிநாத ஆத்ரைய்யா, புரிசை கண்ணப்ப தம்பிரான், ஸ்தபதி சிற்பி தட்சிணாமூர்த்தி, கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இசைவானில் இன்னொன்று (இளையராஜா) உள்ளிட்ட பிரபலங்கள் குறித்த ஆவணப்படங்களையும் அருண்மொழி இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அருண்மொழி தனிமனிதரல்ல, எந்தவித லாபநோக்கமுமின்றி ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர். திரைப்படம் சார்ந்த விவாதங்கள், பட்டறைகள், குறும்பட முகாம்கள், இலக்கியக் கூட்டங்கள், சர்வதேசத் திரையிடல்கள், கலைநிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவரைக் காணமுடியும். கையில் ஒரு கேமராவுடன் முக்கிய ஆளுமைகளை போகிற போக்கில் படம்பிடித்து அவற்றை ஆவணப்படுத்தினார்.
2010க்குப் பிறகு பிரசாத் ஸ்டுடியோ நடத்திவந்த திரைப்படக் கல்லூரியில் பணியாற்றினார். சமீப ஆண்டுகளில் அருண்மொழி, நடிப்புப் பயிற்சிக்கென்று சொந்தமாகவே 'ஸ்தானிஸ்லாவிஸ்கி' நடிப்புப் பள்ளி என்ற பெயரில் ஒரு திரைப்படப் பயிற்சிக் கூடத்தைத் தொடங்கினார். கடந்த 20 ஆண்டுகளில் அவரிடம் பயின்ற மாணவர்கள் திரைப்படத் துறையிலும், ஊடகங்களிலும் சிறப்பான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இவை தவிர சில திரைப்படங்களிலும் பல குறும்படங்களிலும் நடித்தவர். பல திரைப்பட, குறும்பட, ஆவணப்பட விழாக்களில் நடுவர், தணிக்கை குழு உறுப்பினர், நாடக இயக்குநர், பத்திரிகையாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் இயக்குநர் அருண்மொழி.
இந்நிலையில் அருண்மொழி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன. அரசியல் பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள், அவரிடம் திரைப்படக் கல்வி பயின்ற மாணவ மாணவிகளும், திரைப்பட இயக்குநர்கள் பலரும் அவரது மறைவுக்குப் பெரிதும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர்கள் ஹரிஹரன், லெனின் பாரதி, வசந்த் ஆகியோர் காலையிலேயே இயக்குநர் அருண்மொழிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். மாணவர்களும் திரைப்பட ஆர்வலர்களும் இன்று காலையிலிருந்து திருவான்மியூரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago