''எனக்கு முதல் பட வாய்ப்பு வாங்கித் தந்ததே இளையராஜாதான்’’  - மணிவண்ணனும் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ திரைப்படமும்!

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

’’எனக்கு முதல் பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே இளையராஜாதான். அந்தப் படம்தான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்று நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன், முன்பொருமுறை தெரிவித்துள்ளார். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் ரிலீசான நாள் இன்று.

இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் முதலில் இயக்கிய படம் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. கோயம்புத்தூர்தான் மணிவண்ணனின் சொந்த ஊர். சினிமா ஆசையில் சுற்றிக் கொண்டிருந்த மணிவண்ணன், ‘16 வயதினிலே’ படம் பார்த்துவிட்டு, பக்கம்பக்கமாக எழுதி, பாரதிராஜாவுக்கு அனுப்பிவைத்தார்.

இந்தக் கடிதத்ததைப் படித்துவிட்டு, அந்த எழுத்தின் ஈர்ப்பில், மணிவண்ணனை அழைத்து, உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாரதிராஜா என்பார்கள். இயக்குநர் கே.ரங்கராஜும் பாரதிராஜாவுக்கு இதுபோல் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியதாகவும் அதைப் பார்த்துவிட்டு, உதவி இயக்குநராக அவரை பாரதிராஜா சேர்த்துக் கொண்டார் என்றும் பல பேட்டிகளில் ரங்கராஜ் சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக மணிவண்ணன் பணியாற்றிய போது, கதை என்ன, காட்சி என்ன, பாடலுக்கான ஆரம்பம் என்ன என்பதெல்லாம் குறித்து இளையராஜாவிடம் விளக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் கதை சொல்லும் பாணி, பாடலுக்கான சூழலை அவர் விவரிக்கும் முறை என்பதெல்லாம் இளையராஜாவுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

இதுகுறித்து, திரைப்பட விழா ஒன்றில் மணிவண்ணன் தெரிவித்ததாவது:

ஒருநாள், திரைப்பட கதாசிரியர் கலைமணியை அழைத்தார் இளையராஜா. ‘அடுத்த படம் பண்றதா இருக்கீங்களே. யாரை டைரக்டராப் போடப் போறீங்க’ என்று இளையராஜா, கலைமணியிடம் கேட்க... ‘இன்னும் முடிவு பண்ணலை சார்’ என்றார். ’அப்படீன்னா, பாரதிராஜாகிட்ட இருக்கிற மணிவண்ணனுக்கு ஒரு படம் கொடுங்களேன். மணிவண்ணன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. நிச்சயமா ஜெயிப்பார்’ என்று இளையராஜா, கலைமணியிடம் உறுதியாகச் சொன்னார்.

உடனே கலைமணி சார், என்னை அழைத்து இயக்குவதற்கு வாய்ப்பு வழங்கினார். அதுதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ திரைப்படம். பாரதிராஜாவிடம் நான் பணியாற்றிக் கொண்டிருந்ததையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இளையராஜா, என் மேல் நம்பிக்கை வைத்து கலைமணியிடம் சிபாரிசு செய்ததை நான் மறக்கவே முடியாது.

அதேபோல், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் இருந்து ஏராளமான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துக் கொடுத்தார். நல்ல நல்ல பாடல்களையெல்லாம் வழங்கினார்.

இவ்வாறு மணிவண்ணன், விழாவில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

1982ம் ஆண்டு, அக்டோபர் 15ம் தேதி ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட இன்றுடன் படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன.
‘கோபுரங்கள் சாய்வதில்லை’ தொடங்கி வெரைட்டி வெரைட்டியாக ஏராளமான படங்களை இயக்கிய மணிவண்ணனையும் அவரின் அசால்ட் நடிப்பையும் மறக்கவே முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்