மகராசன் மோகன்
தமிழ் படங்களில்தான் கவனம் செலுத்த வில்லையே தவிர, தமிழ் பேசுவதில் அருவி போல கொட்டுகிறார் மஞ்சு வாரியர். நாகர்கோவிலில் பிறந்து, வளர்ந்தவராச்சே.. மலையாள சினிமா வரைபடத்தில் தனக்கென மிகப் பெரிய எல்லையை நிறுவிவரும் இவர் தமிழில் வெளிவர உள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழுக் காக அவருடன் ஒரு நேர்காணல்..
மஞ்சு வாரியர் ‘அசுரன்’ படத்துக்குள் வந்தது எப்படி?
தனுஷ்தான் காரணம். நாங்க இருவ ரும் நீண்டகால நண்பர்கள். ஏற்கெனவே இரண்டு, மூன்று படங்களில் நடிக்க எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது. அது சரியாக அமையவில்லை. இப் போது வெற்றிமாறன், தனுஷ் என நல்ல கூட்டணி அமைந்தது. நல்ல கூட்டணிக்கு யாராவது நோ சொல்வார்களா?
கதையில் உங்கள் பங்களிப்பு என்ன?
தனுஷின் மனைவி பச்சயம்மாவாக வர்றேன். பொதுவாகவே, வெற்றிமாறன் படங்களில் பெண் கதாபாத்திரம் சின்ன தாக இருந்தாலும், அழுத்தமாக, குறிப் பிட்டு சொல்லும் விதமாக இருக்கும். ‘அசுரன்’ படத்தில் என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழில் தொடர்ந்து நடிக்கலாம் என நினைத்துள்ள நேரத்தில் இதுபோன்ற தொடக்கம் அமைந்தது சந்தோஷம்.
மலையாளத்தில் பிஸியான நீங்கள் தமிழில் நடிக்க ஆசைப்படுவது ஏன்?
1996 முதல் 98 வரை நான் பிஸியாக இருந்த நாட்கள். அப்போதே தமிழில் பட வாய்ப்புகள் வந்தன. நேரம் ஒதுக்கி கதை கேட்பதும், தேதிகளும்தான் பிரச்சினையாக இருந்தது. சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலை யாள சினிமா உலகுக்கு வந்தேன். அப்போ தும், தமிழில் நடிக்கும் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. காத்திருந்ததன் பலனாக இப்போது அந்த நல்வாய்ப்பு அமைந்திருக்கிறது.
மோகன்லால், மம்முட்டி அளவுக்கு மலை யாள சினிமாவில் தனி உயரத்தை தக்க வைக்க ஏதாவது ஃபார்முலா உண்டா?
ஏற்கெனவே நடித்த படங்களின் நற்பெயரைக் கொண்டே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைகின்றன. அந்த வகையில் எனக்காக கதை, அதில் என் கதாபாத்திரம், இயக்குநர், படக்குழு என பின்னால் ஒரு பெரிய அமைப்பு உள்ளது. இவற்றோடு மக்களின் அன்பும் சேர்வ தால் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு இடம் கிடைத்து விடுகிறது.
ஜோதிகா, நயன்தாரா போன்றவர்கள் சோலோ நாயகியாக களமிறங்குவதற்கு உங்கள் தாக்கம் காரணமா?
நாயகியை மையமாகக் கொண்ட படங்கள் வருவது சாவித்ரி, சரோஜாதேவி காலத்திலேயே இருந்திருக்கிறது. பழைய நடிகைகள் செய்ததைத்தான் இப்போது செய்கிறோம். நம்பிக்கை வைத்து நாங்கள் நடிக்க வரும்போது, எங்களுக்காக நல்ல கதைகளை உருவாக்குகின்றனர். இதன்மூலம், பெண்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் தரமுடிகிறது என்றால் பெரிய மகிழ்ச்சி.
பெண்கள் நலனுக்காக பெரிய அளவில் பல விஷயங்கள் செய்கிறீர்களாமே?
நாம் நல்ல நிலையில் இருக்கும்போது, சமூகத் துக்கு நல்லது செய் வதில் தப்பு இல் லையே. சின்ன விஷ யங்கள்தான் செய் கிறேன். பசிக்கிற வங்களுக்கு நம் மால ஒரு வேளை உணவு கொடுக்க முடியும் என் றால், அது போதும். எந்த நல்ல காரிய மும் புண் ணியம்தான்.
படங் களை எப்படி தேர்வு செய்கி றீர்கள்?
என் திட்ட மிடல் மிக எளிமை யானது. நான் நடித்தோ, நடிக்காமலோ இப்படி ஒரு படம் வந்தால் தியேட்டருக்கு போய் பார்ப்பேனா? என்று யோசிப் பேன். அது சரியாக அமைந்தால் ஓகே சொல்லிவிடுவேன்.
மலையாளம், தமிழில் அடுத்து? நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி தந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ பட இயக்குநரின் புதிய படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் கதை சொல்ல வேண்டும் என ஒருசிலர் கேட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு என்னை எந்த அளவுக்கு பிடிக்கிறது என்பது ‘அசுரன்’ வந்ததும் தெரிந்துவிடும். அதன் பிறகு கதை கேட்பதாக கூறியுள்ளேன்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago