’கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் பீட்டா அமைப்பை கடுமையாக சாடிப் பேசினார் இயக்குநர் பாண்டிராஜ்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மெளனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள்.
சூர்யா தயாரித்த இப்படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருப்பதால், இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் சூர்யா, மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா 2 லட்சம் வழங்கப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற ரேக்ளா காட்சிக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. பல்வேறு கட்டப் போராட்டத்துக்குப் பிறகு படக்குழுவினர் தணிக்கைச் சான்றிதழ் பெற்றது. தற்போது படம் வெளியாகியுள்ள சூழலில் இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது:
தயாரிப்பாளர் சூர்யா, கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணிபுரிந்த எனது உதவி இயக்குநர்களுக்கு பெரிய நன்றி. படத்தின் தொடக்கத்தில் கார்த்தி சார் இக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயணிக்க ஆரம்பித்ததும், இவர் சரியாக பொருந்தி இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.
படப்பிடிப்பில் நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுள்ளார்கள். அது சுத்தப் பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா போட்டியை மக்கள் அவ்வளவு ரசித்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதை படத்தில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டோம். பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள்.
எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அப்படி உங்களுக்கு என்ன அக்கறை எங்களுக்கு இல்லாதது. எங்களது ஆடு மாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் யாரும் கவலைப் பட வேண்டாம்.
ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு பசியாக இருக்குமே என்று ஓடி வருவோம். மட்டன், சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும் கால்நடைகளை எங்கள் உறவுகளாகவே பாவிக்கிறோம். எங்களது ஆடு, மாடுகளை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியாதா. நடுவில் நீங்கள் யார்?
ரேக்ளா ரேஸ் இல்லை என்றால் படமே ரிலீஸ் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒருவேளை அக்காட்சி நீக்கப்பட்டிருந்தால், போராட்டம் நடத்தியிருப்பேன்.
இவ்வாறு பாண்டிராஜ் பேசினார்
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago