சென்னை: லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது, நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, எங்களது படக்குழு தரப்பிலிருந்து ’லியோ’ படத்தின் முதல் காட்சியை, அக். 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24 -ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ’லியோ’ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி அவசர முறையீடு செய்தார். லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு, படம் வெளியாகும் நாளான 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும்தான் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த படம் மொத்தம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால், இடைவேளை காட்சிக்கான நேரம் உட்பட, மொத்தம் 18 மணி 45 நிமிட நேரம் தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பி, அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.17) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அப்போது, மனுதரார் தரப்பில் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே, நாளை முதல் வழக்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து நாளை காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
23 mins ago
விளையாட்டு
20 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தொழில்நுட்பம்
33 mins ago
உலகம்
47 mins ago
தமிழகம்
56 mins ago
விளையாட்டு
41 mins ago
இந்தியா
1 hour ago