புதிய வோல்வோ பெட்ரோல் மைல்ட் ஹைபிரிட் எக்ஸ்சி90 அறிமுகம்

By செய்திப்பிரிவு

வோல்வோ கார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யுவி ரகமான – புதிய வோல்வோ எக்ஸ்சி90, மாடல் காரை முழுவதும் பெட்ரோலில் இயங்கும் மைல்ட் ஹைபிரிட் இன்ஜினைக் கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் வோல்வோ எஸ்90 மற்றும் வோல்வோ எக்ஸ்சி60 மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாகத் தற்போது பெட்ரோலில் இயங்கும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசலில் இயங்கும் கார்களுக்கு மாற்றாக முழுவதும் பெட்ரோலில் இயங்கும் வாகனத்தை அறிமுகப்படுத்தி கரியமில வாயு வெளியேற்ற அளவை சர்வதேச அளவில் குறைக்கும் முயற்சியில் நிறுவனத்துக்கு உள்ள பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய பெட்ரோல் மைல்ட் ஹைபிரிட் எக்ஸ்சி90 மாடலின் விற்பனையக விலை ரூ.89,90,000. புதிய எக்ஸ்சி90 எஸ்யுவி மாடலில் 7 பேர் பயணிக்கலாம். நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பமான எஸ்பிஏ எனப்படும் அளவீட்டு அடிப்படையிலான பொருள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. வோல்வோ நிறுவனத்தின் மேம்பட்ட தனித்துவமிக்க வடிமைப்பு நுட்பத்தின் அடிப்படையில் இது தயாராகிறது. இதே பிளாட்பார்மில்தான் 90 மற்றும் 60 சீரிஸ் மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.

புதிய எக்ஸ்சி90 அறிமுகம் மூலம் நடப்பு நிதி ஆண்டின் காலாண்டில் மூன்று மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையின் விளைவாகப் புதிய தொழில்நுட்பத்திலான கார்களை அறிமுகம் செய்யத் தூண்டுதலாக அமைந்துள்ளது. இந்த மாடலை அறிமுகம் செய்ததன் மூலம் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக பெட்ரோல் வாகனங்களை மட்டுமே தயாரிப்பது என்ற நிறுவனத்தின் இலக்கு பூர்த்தியடைந்துள்ளது. அத்துடன் இந்தியச் சந்தையில் மேலும் வளர்வதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது என்று வோல்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

புதிய எக்ஸ்சி90 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் வாகனம் ஓட்டுபவருக்கு மேம்பட்ட சொகுசை அளிப்பதாக அமையும். தலைப்பகுதிக்கு மேல் உள்ள டிஸ்பிளே கார் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை உணர்த்தும். அத்துடன் அடுத்தடுத்த திருப்பங்களுக்கான சாலை வழிகாட்டுதலை (நேவிகேஷன்), ஸ்மார்ட்போன் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இவை அனைத்துமே சாலையிலிருந்து கவனத்தை திசை திருப்பாமல் மேற்கொள்ள முடிவதுதான் இதன் சிறப்பு.

புதிய எக்ஸ்சி90 காரில் தொடு திரை இன்டர்பேஸ் காரின் அனைத்துச் செயல்பாடுகளையும் விவரிக்கும். பாதை விவரத்தை விவரிக்கும் நேவிகேஷன், காரில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களின் விவரம் உள்ளிட்ட அனைத்தையும் தெளிவுபடுத்தும். பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் வோல்வோ எப்போதுமே முன்னோடியாகத் திகழும். அந்த வகையில் காரின் பாகங்கள் குறிப்பாக உறுதியான ஸ்டீலில் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் காரினுள்ளே பயணிகளைப் பாதுகாக்க ஏராளமான அம்சங்களை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. காருக்கு வெளியிலும் பாதுகாப்பு அம்சங்கள் பல உள்ளன.

புதிய எக்ஸ்சி90 மாடல் கார் புதிய மேம்பட்ட காற்று சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இது காரினுள் மிக சுத்தமான காற்று வீச வழிவகுக்கிறது. வெளிப்புற காற்று மாசால் ஏற்படும் சுகாதாரக் கேடு ஏதும் காரினுள் பயணிப்பவர்களுக்கு நேராத வகையில் இதனுள் காற்று சுத்திகரிக்கப்படுகிறது. சுகாதாரமான காற்று சிறப்பாக கார் ஓட்டுவதற்கும் வழிவகுக்கிறது. மாசில்லாக் காற்றை சுவாசித்தபடியே டிரைவர் கவனமாக கார் ஓட்டவும் இது உதவுகிறது.

சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையிலான சூழலை எக்ஸ்சி90 உருவாக்கியுள்ளது. இதன் உள் பகுதியில் உயர் தரத்திலான மரம் மற்றும் உயரிய உலோக பாகங்கள் ஸ்கான்டநேவியன் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 ஆகிய மாடல் கார்களுக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு விற்பனைக்குப் பிந்தைய உத்தரவாதம் இந்த காருக்கும் அளிக்கப்படுகிறது. வோல்வே சேவை பேக்கேஜ் சிறப்புச் சலுகையாக வரிகள் தவிர்த்து ரூ.75,000 அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பெட்ரோல் மைல்ட் ஹைபிரிட் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போதைய பண்டிகைக் காலச் சலுகையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக அளிக்கப்படும் 3 ஆண்டு சலுகையை உள்ளடக்கியதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

48 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்