இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 9-வது நாளான இன்றும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 பைசாவும், டீசல் 23 பைசாவும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.78 லிருந்து ரூ.76.26 பைசாவாகவும், டீசல் ரூ.74.03 லிருந்து ரூ.74.26 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ரூ.79.96 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டர் ரூ.72.69 பைசாவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தலாம் என்ற அறிவிப்பு வந்தபின் முதல் முறையாக தொடர்ச்சியாக 9 நாட்கள் விலை உயர்ந்து வருவதும், விலையும் ஏறக்குறைய 5 ரூபாய் அதிகரித்து இருப்பதும் இதுதான் முதல் முறையாகும்.
இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.23 பைசாவும் கடந்த 9 நாட்களில் அதிகரித்துள்ளது. இந்த விலை வாட் வரி, போக்குவரத்துச் செலவுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம்.
கடந்த 83 நாட்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.
அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் சுமத்துகின்றன.
கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் 14-ம் தேதி பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரியை லிட்டருக்கு 3 ரூபாயும், கடந்த மே 5-ம் தேதி பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியாக மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
கரோனா வைரஸால் லாக்டவுனில் இருந்த பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புப் பாதைக்குக் கொண்டுவரும் நோக்கில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியதால், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலையும் படிப்படியாக அதிகரித்து வந்தது.
ஆனால், அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக எழுந்த தகவலால் மக்களிடையே மீண்டும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இது திங்கள்கிழமை வர்த்தகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியதால் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 1.7 சதவீதம் விலை காலை வர்த்தகத்தில் சரிந்தது. கடந்த வாரத்தில் பேரல் 40 டாலர் என்று உயர்ந்திருந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 38 டாலராகச் சரிந்தது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரியும்பட்சத்தில் வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago