துருக்கி, எகிப்து வெங்காயம்: இறக்குமதிக்கு அனுமதி அளித்தும் வந்து சேராதது ஏன்?

By செய்திப்பிரிவு

துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்வதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.

பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட வெங்காயம் இன்னமும் வந்து சேரவில்லை. இதற்கான காரணம் குறித்து நாசிக் கூட்டுறவு வெங்காய விற்பனையாளர்கள் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வர்த்தகர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் இறக்குமதி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதற்கு காரணம் இந்தியாவில் பயன்படுத்தும் வெங்காயம் கிடைக்கவில்லை.

துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்தால் விற்பனை செய்ய முடியுமா என வர்த்தகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விற்பனைக்கு தகுந்த வெங்காயம் வெளிநாடுகளில் கிடைக்கவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்