கால்நடைகளின் நோய்களை விரட்டும் மூலிகை மசால் உருண்டை

By சீ.கோவிந்தராஜ்

விவசாயிகளின் உயிர்த் தோழனாகவும், விவசாயம் பொய்த்துப் போகும்போதும் அவர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு பெற்றவை கால்நடைகள். ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.

அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி போன்ற கால்நடைகளுக்கான நோய்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையே தொடர்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான கால் நடைகளின் நலனை காக்க ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இயங்கி வரும் ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க ஜெயம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கே.வி. கோவிந்தராஜ் கூறும் வழிமுறைகள்:

கால்நடைகளுக்கு அன்றாடத் தேவைக்குண்டான அடர்தீவனம், பசுந்தீவனம் போதுமான தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் நமக்கிருக்கிறது. அதேபோல் கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாரம்பரியமாக நாம் கையாண்டு வந்த வழிமுறை களைத் தெரிந்து, அவற்றைப் பின்பற்றுவது நலம் பயக்கும். அந்த வகையில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மூலிகை மசால் உருண்டை.

ஆடு, மாடு போன்ற கால்நடை களுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் இன்ன பிற தொற்று நோய்களும் தாக்காது. சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

1.அருகம்புல் 2. ஆவாரம் பூ இலை 3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கண்ணி 4. சோற்றுக்கற்றாழை 5. ஆடாதோடா 6. வாத நாராயணன் இலை 7. ஓரிதழ் தாமரை 8. செம்பருத்தி 9.தும்பை 10. அழுதாழை 11. பெரியா நங்கை 12. சிறியா நங்கை 13. அமுக்காரா 14. அம்மாள் பச்சரிசி 15. வாழைப்பூ 16. வெற்றிலை 17.பிரண்டை 18. துத்தி 19.மாவிலை 20.வல்லாரை 21.துளசி 22.முடக்கறுத்தான் 23. மணத்தக்காளி 24. புதினா 25. நெருஞ்சி 26. நெல்லிக்காய் 27. நுணா 28. பொன்னாங்கண்ணி 29.நல்வேளை 30.நாய்வேளை 31. பால்பெருக்கி 32.குப்பைமேனி 33. கோவை இலை 34. மொசு மொசுக்கை 35. கருவேப்பிலை 36. கீழாநெல்லி 37. அகத்தி 38. சரக்கொன்றை 39. நிலவேம்பு 40. வேலிப்பருத்தி 41. வெட்டிவேர் 42.மருதாணி 43. வில்வஇலை 44. விஷ்ணுகிரந்தி 45. மாதுளம் பழம் தோல் 46. தவசி முருங்கை 47. அப்பக்கோவை 48. அல்லி 49. தாமரை 50. அரசு இலை 51. வேப்பிலை 52. தூதுவாளை 53. தொட்டாச்சிணுங்கி 54. எலுமிச்சை இலை 55. கொய்யா இலை 56. ஆல் இலை போன்ற மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும்.

மேலும், 1.சுக்கு 2. மிளகு 3. திப்பிலி 4. பூண்டு 5. அகில் 6. மிளகாய் வற்றல் 7. கிராம்பு 8.ஜாதிக்காய் 9. கடுக்காய் 10. வெந்தயம் 11. அதிமதுரம் 12.சீரகம் 13. கசகசா 14. ஓமம் 15. உப்பு 16.தண்ணீர் விட்டான் கிழங்கு 17. சிறிய வெங்காயம் 18. கொத்தமல்லி விதை 19. பெருங்காயம் 20.தேங்காய் 21. பனைவெல்லம் 22. ஏலக்காய் 23. மஞ்சள்தூள் ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும். மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி, கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் மூலிகைகளைக் கொண்டே அந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம். மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் கோவிந்த ராஜ்.

மேலும் விவரங்களுக்கு 98427 04504 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்