சீன மூங்கில்போல் பலன் தரும் முதலீடு!

By பா.பத்மநாபன்

இது ஒரு வகையான மூங்கில். இது நமக்கு பல அர்த்தங்களை உணர்த்துகிறது. உதாரணமாக நாம் சீன மூங்கில் மரத்தின் விதையை எடுத்துக் கொள்வோம். வருடம் முழுவதும் அதற்குத் தினசரி தண்ணீர் விட்டு, உரம் இட்டாலும் எந்த ஒரு வித வளர்ச்சியையும் முதலாம் ஆண்டு காண முடியாது.

இரண்டாவது வருடமும் அதே மாதிரி தினசரி தண்ணீர் பாய்ச்சி, உரத்தை இட வேண்டும்; நம் கண் முன்னால் எந்த ஒரு வளர்ச்சியையும் அது வெளிக்காட்டாது.

மூன்றாவது வருட முடிவிலும் அதே நிலை, நம்மில் பலர் பொறுமை இழந்து விடுவோம்; சிலர் 4 வது வருடம் தொடரும் போதும் அதேநிலை கண்டு நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

ஐந்தாவது வருடம் தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு அதை உற்றுக் கவனித்தால் அது வளர ஆரம்பிக்கும். அதனுடைய உயரம் 6 வாரங்களில் எவ்வளவு தெரியுமா? ஒரு நிமிடம் உங்களது மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள், ஆமாம் 90 அடி; உங்களால் கண்டிப்பாக இதை நம்ப முடியாது, ஆனால் இது முற்றிலும் உண்மை.

நான்கு வருடங்களாக சீன மூங்கில் சும்மா இருக்கவில்லை, அது உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கடந்தவுடன், அது உள்ளிருந்து வெளியே விஸ்வரூப வளர்ச்சியைக் கொடுக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் PATIENCE PAYS என்று சொல்வார்கள்.

நம் அன்றாட வாழ்வில் பலரைப் பார்த்து இருப்போம். அவர்கள் உழைத்த உழைப்பு, அவர்களுக்குத் தாங்கள் செய்கிற செயல்களின் மேல் இருந்த தீராத நம்பிக்கை ஆகியன விஸ்வரூபம் எடுக்கும்போது அந்த வளர்ச்சியைப் பார்த்து பலர் அவருக்கு அதிர்ஷ்டம் என்று கமென்ட் சொல்வதுண்டு.

சிலருக்கு அவ்வப்போது அதிர்ஷ்டம் அடிக்கலாம். உங்களுக்கு உண்மையாகவே தகுதி இல்லை என்றால் மற்றவர்களால் சொல்லக்கூடிய அதிர்ஷ்டத்தை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் ஆவது. அவ்வாறு இருக்கும்போது அதற்குக் கொஞ்ச கால அவகாசம் தர வேண்டும். சீன மூங்கில் மரத்தைப்போல இதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டு கால அவகாசம் தர வேண்டும்.

2008 ஜனவரி சரிவிற்குப் பிறகு சந்தை இப்போதுதான் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2003 முதல் 2007 வரை சந்தை மேலே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பலர் அதிக முதலீடு செய்தது அப்போதுதான். அவ்வாறு செய்தவர்கள் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

கடந்த ஒரு வருடத்தில் பல பங்குகள் 1 முதல் 4 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. மியுச்சுவல் பண்ட் திட்டங்கள் 30% முதல் 100% வரை ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது.

பலர் நம்பிக்கை இழந்து பணத்தை எடுத்து வேறு இடத்தில் போட்டிருப்பார்கள்.

பலருக்கு மியுச்சுவல் பண்ட் திட்டத் துக்கும் இன்சூரன்ஸ் திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிவதில்லை. இன்சூரன்ஸ் திட்டத்தில் நமக்குக் கொடுக்கக்கூடிய டாக்குமெண்டிற்கு பாலிசி என்று பெயர். இது வருடா வருடமோ, அல்லது மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒரு முறையோ கட்ட வேண்டும். ஒரே நிறுவனம் இன்சூரன்ஸ் மற்றும் மியுச்சுவல் பண்ட் திட்டத்தை நடத்துவதால் இரண்டும் ஒன்று என பலரும் நினைப்பதுண்டு.

டைவர்சிபைட் மியுச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 5 வருட முடிவில், 12 முதல் 15% ரிடர்ன்ஸ் சந்தை சரி இல்லாத சமயத்தில் கூட கிடைத்திருக்கும். செக்டார் பண்டில் முதலீடு செய்திருந்தால் பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. ஒன்று தெரிந்து முதலீடு செய்ய வேண்டும் அல்லது ஒரு நிதி ஆலோசகரின் உதவியோடு செயல்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தில் கிடைக்கக்கூடிய பென்ஷன் மற்றும் பிராவிடண்ட் பண்டுகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் தான் நமக்கு பலன் தருகிறது. அதை விட்டு விட்டு நாளைக்கே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பணத்தை இழக்க நேரிடும்.

பங்குச் சந்தையைப் பற்றித் தெரியாதவர்கள் முதலில் மியுச்சுவல் பண்ட் திட்டத்தின் மூலம் அது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டு பிறகு நேரடியாக முதலீடு செய்யலாம்; அல்லது உங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும். மேலும் உங்களுக்கு வழி காட்ட ​யாராவது இருந்தால் நீங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம்.

1979 ல் ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் 100 அது 1984 ஏப்ரல் 1ம் தேதி 245, 1989 ஏப்ரல் 1ம் தேதி 714, 1994 ஏப்ரல் 1ம் தேதி 3779, 1999 ஏப்ரல் 1ம் தேதி 3740. அதாவது 5 வருடமாக சந்தை எந்தவித ஏற்றத்தையும் கொடுக்கவில்லை பலரும் இதைவிட்டு வெளியே வந்திருப்பார்கள். 2004 ஏப்ரல் 1ம் தேதி 5591, 2009 ஏப்ரல் 1ம் தேதி 9708, கடந்த 2014 ஏப்ரல் 1ம் தேதி 22386. 35 வருடத்தில் 223 மடங்கு.கூட்டு வட்டியில் கணக்கிட்டால் வெறும் 16.71% தான்.​

சாராம்சம்: சீன மூங்கில் மரம் கதைபோல இருந்தாலும் அதில் கூறப்பட்ட யாவும் நிதர்சன உண்மை. பணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல; அதற்குத் தேவை பொறுமை, நம்பிக்கை, நேரம் ஒதுக்குவது.

எந்த ஒரு முதலீடும் அது வளருவதற்கு கால அவகாசம் தந்து அதை அவ்வப்போதுகவனிக்கவேண்டும். நாம் பணம் ஈட்டக்கூடிய வேலைக்கு ஒரு நாளில் எவ்வளவுநேரத்தை செலவிடுகிறோம் அப்படி இருக்குபோது ஒரு பணம் தானாக பெருகவேண்டுமானால் நாம் கொஞ்ச நேரமாவது அதற்கென ஒதுக்கவேண்டும்.

நமக்குத் தேவை போக மீதமுள்ள பணத்தைச் சிறிது சிறிதாக சேமித்தால் சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப பல மடங்கு பணத்தை பெருக்கலாம்.

நேரம் ஒதுக்குங்கள், முதலீட்டைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கூட நீங்கள் பணம் செய்வதை யாராலும் தடுக்கமுடியாது.

padmanaban@fortuneplanners.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்