M.G.R. படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான். காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயா ரிப்பு. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக் குலைத்தன. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் விளங்கும் அணுசக்தி பற்றிய ரகசிய குறிப்பை வில்லன் கோஷ்டியிடம் இருந்து அதே ஜப்பானிலேயே எம்.ஜி.ஆர். மீட்பதுபோல காட்சி. இதற்காகவே, எம்.ஜி.ஆருக்கு சபாஷ் போடலாம்.
முன்னதாக, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு எம்.ஜி.ஆர். செல்வார். அங்கே ‘துஸித் தானி’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான ஓட்டல். அந்த ஓட்டலில் படக்குழுவினர் தங்கியிருந் தனர். ஓட்டலின் அழகைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அங்கேயே காட்சிகளை படமாக்க முடிவு செய்தார். படம் வெளி யானது 1973-ம் ஆண்டு. அந்தக் காலகட்டத்தில், கிராமங்களை விடுங் கள்; சிறிய நகரங்களில் கூட ஓட்டல் என்றால் குண்டு பல்பின் மங்கிய ஒளியில் கால் உடைந்த ஸ்டூல்களும், ஈக்கள் மொய்க்கும் மேஜையும், நசுங்கிய டம்ளர்களும்தான் நினைவுக்கு வரும். அதைத் தகர்த்தெறிந்து இப்படியெல் லாம்கூட இருக்குமா என்று வியக்க வைத்தது ‘துஸித் தானி’ ஓட்டல்.
எம்.ஜி.ஆரைப் பார்க்க தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா ‘துஸித் தானி’ ஓட்டலுக்கு வருவார். ஓட்டலின் முன் அறை யில் இருந்து வாயிலை பார்க்கும் கேமரா கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப் பது போலிருக் கும். மேட்டா, நேராக தன்னை சந்திப்பது போல காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்திருக் கலாம். ஆனால், ஓட்டலின் அழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி, (போலீஸ் அதிகாரி யாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் பெயர்) ஓட்டலின் முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் நடிகை மேட்டா ஓடி வரும்படி காட்சியை அமைத்திருப்பார். அப்போது ஓட்டலின் வேலைப்பாடுகள் மிக்க விதானத்துடன் கூடிய நீளமான வராண்டாவின் அழகை ரசிக்க முடியும்.
வராண்டாவை கடந்து வெளியே சென்றால் பரந்த இடம். அங்கே நடிகை சந்திரகலாவும் நாகேஷும் இருப்பார்கள். அங்கு மேட்டாவை எம்.ஜி.ஆர். அழைத்து வருவார். இவர் கள் நான்கு பேரும் இருக்கும் இடத்துக்கு பின்னே பச்சையும் நீலமுமாய் நீரில் மின் னும் நீச்சல் குளம். அதன் எதிர்க்கரையில் பீறிட்டு அடிக்கும் நீரூற்றுகள்.
லோ ஆங்கிளில் கேமராவை வைத்து படம்பிடித்திருப்பார்கள். இந் தக் காட்சியில்தான் ஓட்டல் ‘துஸித் தானி’யின் முழு பிரம்மாண்டமும் தெரியும். சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேகூட, 14 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடம்தான் பிரம்மாண்டம். ஒரு படத்தில் கதாநாயகன் சென்னை வருவதாக காண்பிக்கப் பட்டால் அந்த கட்டிடத் தைத்தான் காட்டுவார் கள். அதற்கே தியேட் டரில் சலசலப்பு ஏற்படும். அதைவிட பல அடுக்கு மாடி களைக் கொண்ட, பலமடங்கு பிரம்மாண்ட மான ‘துஸித் தானி’யை திரை யிலே பார்த்த மக்கள் வியப்பில் வாய் பிளந்தனர்.
அந்த அள வுக்கு கட்டிடங் களைக் கூட, மிகத் திறமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்து வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதனால் தான் அவரது படங்களில் ஒவ்வொரு ஃபிரேமையும் இன்றும் ரசிக்க முடிகிறது.
தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும். இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.
‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும். பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று. இதில் விசேஷம் என்னவென்றால், காட்சி யைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்.
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்று நிச்சயம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்...’ பாடலில் வரும் வரிகளை, எம்.ஜி.ஆர். படங்களை பார்க்கும்போது அனு பவத்தில் நாம் உணர முடியும். அந்த வரிகள்...
‘உள்ள மட்டும் அள்ளிக்கொள்ளும்
மனம் வேண்டும்,
அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்!’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம்.
ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘அடிமைப் பெண்’. இதற்கான விழாவில் கலந்து கொள்ள மும்பை சென்ற எம்.ஜி.ஆரிடம், ‘‘I am your fan’’ என்று கூறி பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூர் வாழ்த்தினார். ‘அடிமைப் பெண்’ கிளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக் காட்சியை தன்னால் கூட அப்படி படமாக்க முடியாது என்று ராஜ் கபூர் பாராட்டினார். |
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
47 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago