மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்
மகளிர் நலனுக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தோண்டு கேசவ் கர்வே (Dhondo Keshav Karve) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் (1858) பிறந்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
l இவருக்கு 15 வயதில் திருமணமானது. குடும்பம் நடத்துவதற்காக ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கோபாலகிருஷ்ண கோகலே அழைப்பின் பேரில் புனேயில் உள்ள பெர்கூசன் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். இங்கு 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
l விதவைகளின் நிலையைக் கண்டு சிறு வயதிலேயே வருந்தியவர், பிரசவத்தில் மனைவி இறந்ததும், எதிர்ப்பை மீறி ஒரு விதவையை திருமணம் செய்துகொண்டார். இதனால், இவரது சாதியினர் மட்டுமின்றி, உறவினர்களும் இவரை விலக்கி வைத்தனர்.
l எதற்கும் கவலைப்படாத இவர், ‘விதவைகள் திருமண சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். விதவைத் திருமணங்கள் நடத்துவதும், இதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்ந்தார். அவர்களுக்கு கல்வி கற்பித்து, சொந்தக் காலில் நிற்க வைப்பது அவசியம் என தீர்மானித்தார். இதற்காக ‘அனாத் பாலிகாஷ்ரம்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
l புனே அருகே ஹிங்கணே என்ற இடத்தில் ஒரு குடில் அமைத்து ஆதரவற்ற சிறுமிகளுக்காக ஆசிரமம் தொடங்கினார். ‘மஹிளா வித்யாலயா’ என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
l பெண்களுக்காக பிரத்யேக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்தார். மகாத்மா காந்தியும் இதை வரவேற்றார். புனேயில் அஸ்திவாரம் போடப்பட்டது. இதன் முதல் கல்லூரி ‘மஹிளா பாடசாலா’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன் முதலாவது முதல்வராகப் பதவியேற்றார்.
l சிறிது காலத்திலேயே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். நாடு முழுவதும் 4 ஆண்டுகள் தொடர் பயணம் மேற்கொண்டு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக நிதி திரட்டினார்.
l இதற்கிடையே பம்பாய் தொழிலதிபர் விட்டல்தாஸ் தாமோதர் டாக்ரஸி ரூ.15 லட்சம் வழங்கினார். இதனால், அவரது தாய் மதி நாதீபாய் தாமோதர் டாக்ரஸியின் பெயர் பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்பட்டது. இதற்கு நிதி திரட்ட 70 வயதில்கூட ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கர்வே.
l கிராமங்களில் கல்வியைப் பரப்ப, மகாராஷ்டிரா பிராத்தமிக் சிக் ஷா சமிதியை நிறுவினார். இந்த அமைப்பு மெல்ல மெல்ல கிராமங்களில் 40 ஆரம்பக் கல்வி நிலையங்களைத் தொடங்கியது.
l இவரது கல்விச் சேவையைப் பாராட்டி, காசி இந்து பல்கலைக்கழகம் இவருக்கு 1942-ல் டாக்டர் பட்டம் வழங்கியது. 1955-ல் பத்மவிபூஷண் விருது பெற்றார். 1958-ல் நூறாவது வயதில் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டது. ‘மகரிஷி கர்வே’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் தோண்டு கேசவ் கர்வே 104-வது வயதில் (1962) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
35 mins ago
க்ரைம்
52 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago