குஸ்டவ் கிர்க்காஃப் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜெர்மனி இயற்பியலாளர்

ஜெர்மனியை சேர்ந்த இயற்பியலாளரும், மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்டவருமான குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் (Gustav Robert Kirchhoff) பிறந்த தினம் இன்று (மார்ச் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் (1824) பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். நாட்டுப்பற்று மிகுந்த குடும்பம் அது. தேசத்துக்கு உழைப் பதற்காக கல்வி கற்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் வளர்க்கப் பட்டார். இதனால், பேராசிரியராக வேண்டும் என்ற நோக்கத்துடனே இவரது கல்வியும் அமைந்தது.

# கோனிஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ் பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21 வயதில் வெளியிட்டார். இது மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சார நெட்வொர்க்குகளில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றை கணக்கிடப் பயன்பட்டது.

# கணிதம், இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். பிரஸ்லாவ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். வேதியியல் களத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.

# ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து நிறமாலையியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1854-ல் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தனர். இவை மின் பொறியியல் துறைக்கு மிகவும் பயன்படும் தனிமங்களாகத் திகழ்கின்றன. இதுவே இவர் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுத் தலைப்பாகவும் அமைந்தது.

# மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857-ல் முதன்முதலாக கண்டறிந்து கூறினார். வெப்ப வேதியியல் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

# பொருட்களில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் வேதி வினை குறித்து ஆராய்ந்தவர், 1859-ல் வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். ஒரு பொருளில் இருந்து அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விளக்கினார். இதை 1861-ல் நிரூபித்தார்.

# தன் மீது விழும் அனைத்து மின்காந்தக் கதிர்வீச்சையும் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடைய ‘கரும்பொருள்’, கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். இதற்கு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ என்ற பதத்தை 1862-ல் முதன்முதலாக பயன்படுத்தினார். இவரது இந்த ஆய்வுகள் குவான்டம் விசையியல் துறை உருவாக வழிவகுத்தது.

# ராபர்ட் புன்செனுடன் இணைந்து நிறமாலைப் பகுப்பாய்வு விதிகளை வெளியிட்டார். ஒளியின் நிறமாலைத் தொகுப்பு குறித்த விதிகளைக் கண்டறிந்து வெளியிட்டார். கணித இயற்பியல் துறையில் இவரது விரிவுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.

# சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக ‘ரூம்ஃபோர்டு’ பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளை வென்றார். ராயல் நெதர்லாந்து கலை, அறிவியல் அகாடமியின் அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# குடும்பச் சுமை, பலவீனமான உடல்நிலை தரும் தொந்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டார். மனிதகுலத்துக்கு பயன்படும் பல ஆராய்ச்சிகளுக்கு வித்திட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63-வது வயதில் (1887) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்