எப்படி? இப்படி!- 11: அழகியின் அழகற்ற மரணம்!

By பட்டுக்கோட்டை பிரபாகர்

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை.

மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய கருத்துகள் எல்லாமே பலரை புருவம் உயர்த்த வைத்தன.

‘‘ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே; ஹாலிவுட் என்பது ஒரு பெண்ணின் முத்தத்துக்கு 50 ஆயிரம் டாலர்களும், அவள் மனசுக்கு வெறும் 50 செண்ட்டும் தரக் கூடியது’’ இவையெல்லாம் அவர் சொன்னவை.

அமெரிக்காவின் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாள் விழாவில் கவர்ச்சியான உடையில், வந்து ‘‘ஹேப்பி பர்த் டே டு பிரெசிடெண்ட்…’’ என்று மேடையில் மன்றோ பாடினார். கென்னடி பேசும்போது, ‘‘மன்றோவின் குரலால் வாழ்த்து பெற்ற பிறகு இன்றுடன் நான் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாம் போலிருக்கிறது’’ என்றார். அன்று இரவு நடந்த விருந் திலும் மர்லின் மன்றோ கலந்துகொண் டார். அன்றைக்கு மர்லின் மன்றோ அணிந்திருந்த உடை அவரது மரணத் துக்குப் பிறகு 12 லட்சம் டாலர்களுக்கு ஏலத்தில் விலைபோனது.

தொடர் தோல்விகள் மன்றோவை மதுப் பழக்கத்துக்கும், போதை மாத்திரை பழக்கத்துக்கும் தள்ளியது. அதனால் அவருக்குத் தொழிலில் கவனம் சிதறி யது. சில படங்களில் இருந்து நீக்கப்பட் டார். மன அழுத்தத்துக்கு வைத்தியம் செய்து கொண்டார். சில முறை தற் கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

1962, ஆகஸ்ட் 5-ம் தேதி அதி காலை 3 மணிக்கு மர்லின் மன்றோ தன் படுக்கையறையில் கட்டிலில் நிர் வாணமாக, கையில் தொலைபேசியின் ரிசீவரைப் பிடித்தபடி மூச்சில்லாமல் கிடந்தார். டாக்டர் அழைக்கப்பட்டார். கண்ணாடி ஜன்னல் உடைக் கப்பட்டு உள்ளே சென்று முதலுதவி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கள் சாப்பிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் கள். தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது.

ஆனால், இந்த மரணம் குறித்து சர்ச்சைகளும், பதில் இல்லாத பல கேள்விகளும் தொடர்கின்றன. அது ஒரு திட்டமிட்ட கொலை என்கிற கோணத்தில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல தொலைக்காட்சிகள் தங்கள் டீமை வைத்து துப்பறிந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

இவர்களின் ஊகம் இதுதான்:

அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மன்றோவுக்கும் காதல் ஏற்பட்டது. நடி கரும்,கென்னடியின் மைத்துனருமான பீட்டர் லாஃபோர்டின் வீட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அதிபர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வார் என்று மன்றோ நம்பினார்.

அதிபர் தன் சகோதரர் ராபர்ட் கென் னடியை அழைத்து மன்றோவைச் சந் தித்து, ‘இனிமேல் வெள்ளை மாளி கைக்கு போன் செய்து தன்னை அழைக் கக் கூடாது’ என்று எச்சரித்து விட்டு வரச் சொன்னார். எச்சரிக்கை செய்வதற்காக சென்ற ராபர்ட்டுக்கு மன்றோவைப் பிடித்துவிட்டது.

ராபர்ட்டுடன் மன்றோவுக்கு புதிய காதல் ஆரம்பித்தது. ராபர்ட்டுக் கும் அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை. மன்றோ, ‘‘உங்கள் இருவரைப் பற்றிய ரகசியங்களை பத்தி ரிகை யாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கப்படுத்துவேன்’’ என்று ராபர்ட்டை மிரட்டினார்.

மன்றோ இறந்த தினத் துக்கு முதல் நாள் மன்றோ வுக்கும் ராபர்ட் கென்னடிக்கும் வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்றது. அருகில் பீட்டர் லாஃபோர்டும் இருந்தார். கோபத்தின் உச்சத்தில் மன்றோ கத்தி எடுத்து ராபர்ட் கென்னடியைக் குத்த முற்பட்டார். கத்தி வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டது.

அவருக்கு சில குறிப்புகள் தந்து விட்டு கென்னடி யும், பீட்டர் லாஃபோர்டும் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அடியாட்களின் உதவியுடன் மன்றோவை நிர்வாணப்படுத்தி டாக்டர் எனிமா மூலம் உயிரைப் போக்கும் அளவுக்கு மருந் தைச் செலுத்தினார். மன்றோவை கட்டிலில் படுக்க வைத்து தற்கொலை போல செட்டப் செய்தார்கள்.

இந்த ஊகங்களுக்கு ஆதாரமாக பலர் குறிப்பிடும் அம்சங்கள்:

அந்தப் படுக்கையின் விரிப்பு கசங்காமல் இருந்தது. மேஜையில் காலியாக இருந்த மாத்திரை பாட்டி லின் மூடி சரியாக மூடப்பட்டிருந்தது. மாத்திரைகளை விழுங்க ஒரு கண்ணாடி டம்ளரோ, தண்ணீரோ, மது வகைகளோ எதுவும் இல்லை.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்ட ரின் அறிக்கையின்படி மன்றோ வயிற்றில் கிட்டத்தட்ட 60 மாத்திரை கள் அளவுக்கு மருந்து இருந்தது. அது வாய்வழியாக உட்கொள்ளப் படவில்லை.

மன்றோவின் வழக்கு விசாரணைத் தொடர்பான பல மருத்துவ அறிக்கை களும், விசாரணை அறிக்கைகளும் பிறகு காணாமல் போயின.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போது மருத்துவர் க்ரீன்சன் மன்றோ வுக்கு முறையான முதலுதவிகள் செய்யவில்லை.

1985-ல் பி.பி.சி தொலைக்காட்சி நடத் திய ஒரு பேட்டியில் மன்றோவின் உதவியாளர் முர்ரே போலீஸிடம் தெரி வித்ததையே சொல்லிவிட்டு, விளக்கு கள் அணைக்கப்பட்டதும் (ஆனால் மைக் அணைக்கப்படாததைக் கவனிக் காமல்) சலிப்புடன், ‘‘இந்த வயதி லும் நான் பொய் சொல்ல வேண் டுமா? மன்றோவுக்கு இரண்டு கென்னடி களோடும் தொடர்பு இருந்தது’’ என்று உளறிவிட்டார்.

சமீபத்தில் 2014-ம் வருடம் ‘தி மர்டர் ஆஃப் மர்லின் மன்றோ கேஸ் க்ளோஸ்ட்’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்தது. அதை எழுதியவர்கள் ஜாய் மார்க்லோஸ் மற்றும் ரிச்சர்ட் பஸ் கின். இதில், பீட்டர் லாஃபோர்ட் மனம் விட்டு சொன்ன பல ரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மன்றோவை மனசுக்குள் காதலித் தவர்கள் பலர். அதில் ‘பிளேபாய்’ பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர் முக்கியமானவர். அவர் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகில் தனக்காக இடம் வாங்கினார்.

‘முதுமையை நினைத்தால் பயம்’ என்று அடிக்கடி சொன்ன மன்றோ, தன் 36-வது வயதில் முதுமையைக் காணாமலேயே மறைந்தார். ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்த அவரின் மரணத்தின் பக்கங்கள் மட்டும் மூடப்பட்ட பக்கங்களாகவே இருக்கின்றன.

- வழக்குகள் தொடரும்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

முந்தைய அத்தியாயம்:>எப்படி? இப்படி?- 10: ஹீரோவாக மாறிய வில்லன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

13 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்