நிர்பயாவின் தோழனும் நட்பு தினமும்: இயக்குனர் வெங்கட்பிரபுவின் உணர்ச்சிப் பதிவு

By கார்த்திக் கிருஷ்ணா

திரைப் பிரபலங்களின் சமூக வலைதள செயல்பாடுகள் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. சர்ச்சைக்காக மட்டுமின்றி, சில நல்ல விஷயங்களும் பிரபலமாகி வருகின்றன.

திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு, சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தமது கருத்துகளைப் பகிர்ந்து வரும் சினிமா பிரபலங்களில் ஒருவர்.

இந்த நிலையில், அவர் இன்று பதிவேற்றிய ட்வீட் மற்றும் ஸ்டேட்டஸ் ஒன்று, தமிழ் இணையவாசிகள் பலரால் பாரட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. அதன் விவரம்:

"ஒரு வருடத்திற்கு முன்னால், டெல்லியில் ஓடும் பேருந்தில், தன் கண் முன்னால் தன்னுடைய தோழி 6 கயவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவதைக் கண்டார். இரும்புக் கம்பியால் அடி வாங்கியும் தன்னால் இயன்ற அளவு போராடினார். அந்த இளைஞரின் காலை குற்றவாளிகள் உடைத்தனர். அவரது உடைமைகளைத் திருடினர், ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர், அவரது தோழியை இரும்பு கம்பியைக் கொண்டு மேலும் சிதைத்தனர். அந்தப் பனி மிகுதியான இரவில் ஓடும் பேருந்திலிருந்து, தனது தோழியுடன் அவரும் வெளியே தூக்கி எறியப்பட்டார்.

உடலில் ஆடைகளின்றி, போராடத் தெம்பின்றி, ரத்தம் கசிய இருவரும் ரோட்டோரத்தில் கிடந்தனர். அப்போதும் அந்த இளைஞர் அவ்வழியே சென்ற கார்களை தடுத்து நிறுத்தி உதவி கோர முயன்றார். தனது தோழியின் உடலை மூட ஒரு சால்வை வேண்டி வழியில் வந்தவர்களிடம் கெஞ்சினார். அவர் கோரியது 40 நிமிட போரட்டத்திற்கு பின்னர்தான் கிடைத்தது.

தொடர்ந்து தன் தோழியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சேர்த்து, போலீஸுக்கு தகவல் தந்து, தோழியின் பெற்றோர்களை அழைத்து, அந்த நேரத்திற்கு தேவையான எல்லா உதவியையும் ஓர் உண்மையான நண்பராகச் செய்தார். அந்த இளைஞரால் எளிதாக அந்தப் பேருந்திலிருந்து தப்பித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தோழியை அப்படியே ரோட்டில் தவிக்க விட்டுச் சென்றிருக்க முடியும். செல்லவில்லை. (நிர்பயாவின் தந்தை வெட்கமின்றி உத்தரப் பிரதேச முதல்வரிடமிருந்து 25 லட்ச ரூபாய் நிதியும், தனது மகனுக்கு வேலையும், இன்னும் தன் மகளின் பெயரில் வந்த எத்தனையோ சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.)

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்கள் இதற்குத் தந்த வெளிச்சத்தில் புகழும் பணமும் சம்பாதித்திருக்க முடியும். அதையும் அந்த இளைஞர் செய்யவில்லை. தனது சிகிச்சைக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி பெறவில்லை. செய்தி ஊடகங்களில் அடிக்கடி பணத்திற்காக தோன்றி பேசியிருக்கலாம். அதையும் தவிர்த்தார். இது நட்பு இல்லையென்றால் வேறு எதை நட்பு என்று சொல்லுவது?

ஒரு தேசமே ஒரு பெண்ணுக்காக வெகுண்டபோது, அந்தப் பெண்ணின் நண்பர் அந்த இரவில் செய்த எதைப் பற்றியும் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த இளைஞர் திரை நட்சத்திரமோ, கிரிக்கெட் வீரரோ அல்ல, அவரது பெயர் அவிந்த்ர பிரதாப் பாண்டே. உத்திரப் பிரதேசம் கோர்க்‌ஷாபூரைச் சேர்ந்த இவர் தன் தோழியை உண்மையாக நேசித்தார். இப்படி ஒரு நண்பர் இருக்கும்போது ஏன் அமெரிக்கர்களை காப்பியடித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி நண்பர்கள் தினத்தை நாம் கொண்டாட வேண்டும்?

அவிந்த்ராவை பெருமைப்படுத்தும் வகையில், உண்மையான நட்பு எது என்று காட்டிய அவரது மன உறுதியை கௌரவப்படுத்தும் வகையில் இந்தியாவில், நண்பர்கள் தினத்தை டிசம்பர் 16-ஆம் தேதி கொண்டாட வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். நான் சொல்வது சரியா? ஆம் என்றால் இதைப் பகிருங்கள், உங்களது கருத்துக்களையும் இங்கே தெரிவியுங்கள்" என்று வெங்கட்பிரபு எழுதியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் பதிவு>http://fb.me/1uQ74prdB

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்