ரெனே டேக்கார்ட்ஸ் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மெய்யியல் அறிஞர், கணித மேதை, தத்துவ மேதை ரெனே டேக்கார்ட்ஸ் (Rene Descartes) பிறந்த தினம் இன்று (மார்ச் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

 பிரான்ஸின் லா ஹயே என்ற ஊரில் (1596) பிறந்தவர். சிறு வயதில் தாயை இழந்தார். தந்தை அரசியல்வாதி. பாய்ட்டி யேர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆனால், வழக்கறிஞர் தொழில் செய்ய விருப்பம் இல்லை. கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம் பயின்றார். அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

 கணிதம் தவிர வேறு எதிலும் நம்பகமான தகவல்கள் இல்லை என்று கருதினார். தனக்குள்ளிருந்தும், இந்த உலகம் என்ற மகத்தான புத்தகம் மூலமாகவும் அறியமுடியாததை பாடப் புத்தகங்களில் படித்து தெரிந்துகொள்ளப் போவதில்லை என முடிவு செய்தார்.

 உலகப் புத்தகத்தைப் புரட்ட ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார். 1616 முதல் 1628 வரை ஹாலந்து, ஹங்கேரி, இத்தாலி, டென்மார்க் என பல நாடுகளுக்கும் சென்றார். சிறிது காலம் ராணுவத்தில் பணிபுரிந்தார். இறுதியில் ஹாலந்தில் குடியேறினார்.

 1626-ல் ரூல்ஸ் ஃபார் த டைரக் ஷன் ஆஃப் தி மைண்ட் என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆயமுறை (Cartesian Coordintate System), பகுப்பாய்வு வடிவியலை (Analytic Geometry) கண்டறிந்தார்.

 ‘உண்மையை அறிய ஏற்கெனவே நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளில் இருந்து தொடங்கக்கூடாது. சந்தேகத்தில் இருந்து தொடங்க வேண்டும்’ என்பார். 1641-ல் இவர் எழுதிய மெடிடேஷன்ஸ் ஆன் ஃபர்ஸ்ட் ஃபிலாசஃபி என்ற நூல் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது.

 மதச் சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வமான உண்மைகளில் மட்டும் கவனம் செலுத்தினார். மனித வாழ்வின் முடிவு என்ன, எங்கே தொடங்குகிறது என்று சிந்தித்தார்.

 மனிதனின் சிந்திக்கும் திறன் குறித்து தீவிரமாக ஆராய்ந்து, ‘நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன் (I think, therefore I am)’ என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார். அது இவரது உலகப்புகழ் பெற்ற தத்துவமாகும்.

 தூய ஆவி, சாத்தான்கள் ஆகியவை திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளே என்றார். இதனால் கடும் எதிர்ப்பு களோடு, வழக்குகளையும் சந்தித்தார். பிறகு மனம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து, மனமும் சிந்தனையின் வெளிப்பாடுதான் என்றார்.

 மனித உடல் எந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டது என்றார். இது பின்னாளில் நிரூபிக்கப்பட்டு, நவீன உடலியலின் அடிப்படைக் கொள்கையாக அமைந்தது. மனதில் ஏற்கெனவே நாம் கொண்டிருக்கும் கருத்துகள், உணர்வுகள், சிந்தனைகளை வெளியேற்றிவிட்டு புதிதாக, உண்மையின் அடிப்படையில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை ஏற்க வேண்டும் என்றார்.

 நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டேக்கார்ட் 54 வயதில் (1650) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்