யூடியூப் பகிர்வு: ஆப்கன் போரின் வலி சொல்லும் ஏ ரே ஆஃப் ஹோப் ஆவணப்படம்

By பால்நிலவன்

ஆவணப்படங்கள் பார்ப்பது என்றாலே, பாகற்காய் பச்சடியை பச்சைமிளகாய் சேர்த்துவைத்து கடித்தது போன்ற நிலைதான். உண்மை கசக்கும், அதே நேரத்தில் உரைக்கவும் செய்யும். இதனாலேயே திரைப்படங்களை ரசிக்கும் பலரும் ஆவணப்படங்கள் பக்கம் தலைகூட வைத்துப் படுப்பதில்லை.

ஆனால் உலகின் சிறந்த ஆவணப் பட இயக்குநர்களில் முக்கியமானவர்களான ராபர்ட் பிளஹார்டி, லாரென் கிரீன்ஃபீல்டு, ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்களின் ஆவணப்படங்கள் பார்வையாளரை ஈர்க்கும்விதம் திரைப்படங்களைவிட அழுத்தமும் அடர்த்தியும் மிக்கவை.

'எ ரே ஆஃப் ஹோப்' ஆவணப்படம் பரந்துவிரிந்த மலைகள் சூழ்ந்த ஆப்கானிஸ்தான் நிலப்பரப்புகளைக் காட்டத் தொடங்குகிறது. இந்நாட்டின் தலைமுறைகள் பலவும் வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி அரை நூற்றாண்டை கடந்ததைச் சொல்லிச் செல்கிறது. இந்தத் தொடக்கமே ஆவணப்படத்தின் உள்ளடக்கம் குறித்த எதிர்பார்ப்பைக் கிளறிவிடுகிறது.

நேரடியாக போர்ச்சூழலில் சிக்கிய மக்களைப் பற்றி பேசாமல் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்மீது அக்கறைகொண்ட டேபிஷ் தொண்டு நிறுவன அமைப்பின் சேவையைப் பற்றி இப்படம் பேசுகிறது. அதனோடு மக்கள் எவ்வகையான இன்னல்களுக்குள் எல்லாம் சிக்கித் தவித்துவருகிறார்கள் என்பதையும் பார்க்கமுடிகிறது.

ஆப்கானிஸ்தானில் திருமணத்தின்போது பெண்ணின் விருப்பமே கேட்கப்படுவதில்லை என்கிறார் சோஹ்ரா. அதீத குடிப்பழக்கம் கொண்ட தன் கணவரது தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி நரகத்தில் சிக்கித்தவிக்கிறார், கபீசா பகுதியிலிருந்து போர்பாதிப்பினால் காபூல் ஷோர் பஸாருக்கு இடம்பெயர்ந்த அலியா. போர்ச்சூழலில் சிக்கிய கர்ப்பிணிகள் நிலையோ இன்னும் மோசம். தகுந்த அரவணைப்பும் மருத்துவ உதவியும் பெறவில்லையென்றால் இறப்புதான் முடிவு.

போர் எனும் அரக்கனால் பெண்கள் படும்வேதனைகள் அதிகம். பெண்கள் மட்டுமின்றி சமூக, அரசியல், குடும்ப சண்டைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் திறன்குறைபாடு கொண்டவர்களாகவும் வளர்கிறார்கள். சரி அரசாங்கமே போரில் நிலைகுலைந்துபோயுள்ள நிலையில் யார் என்ன செய்ய முடியும்?

மக்களுக்குத் தேவையானதை அரசாங்கம் செய்யாதபோது, அங்கு தொண்டுநிறுவனங்கள் களம் இறங்கிவிடுகின்றன. இதனால் அவர்களுக்கு லாபமோ ஆதாயமோ அது நம் கவலையில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் தகுந்த உதவிகளும் நிவாரணங்களும் கிடைக்கின்றதே அதுதான் முக்கியம்.

இந்த ஆவணப் படத்தை எடுத்ததுகூட 'டேபிஷ்' என்ற தன்னார்வ அமைப்புதான். கபீசா பகுதியிலிருந்து போர்பாதிப்பினால் காபூல் ஷோர் பஸாருக்கு இடம்பெயர்ந்த அலியா என்ற பெண்மணி டேபிஷின் உதவியோடு இன்று ஒரு பள்ளி ஆசிரியை ஆகியிருக்கிறார்.

ஒரு காலத்தில் பேரீச்சை உள்ளிட்ட உலர் பழவிளைச்சலுக்கு புகழ்பெற்ற தேசம் இன்று வெடிமருந்துகளின் ரசாயனப் புகை மலிந்த பூமியாகிவிட்டது. இந்தச் சூழலில் எத்தகைய பிரச்சனைகளோடு மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஸ்டீவ்ஸ் ரோட்ரிகிவ்ஸ் சிறந்த ஒளிப்பதிவில், ஐஷ்வர் கிருஷ்ணனின் கவித்துவமான படத்தொகுப்பில், கிறிஸ்டோபர் ராஜாவின் நம்பிக்கையூட்டும் இசையில் வனிதா நாயரின் கம்பீரமான பின்னணி குரலில் மட்டுமில்லை இன்னும் பலரது ஒத்துழைப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் நம்மை கூர்ந்து கவனிக்க வைக்கிறது.

சுதந்திரம், வளர்ச்சி, வன்முறை இல்லாத அன்பு என ஆப்கன் மக்கள் ஏங்கும் வாழ்வை கிழக்கின் ஒளிக்கதிர்கள் வீசும் நாளைநோக்கி நகர்த்த விரும்பும் 'எ ரே ஆஃப் ரோப்' ஆவணப்படம் தவிர்க்கமுடியாத இடத்தில் உள்ளது.

குறும்படத்தைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்