27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள்  13 - மிருகசீரிடம் பற்றி வடிவேலுவிடம் சொன்ன ரஜினி! -   ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள் ; A to Z தகவல்கள் 13 -
மிருகசீரிடம் பற்றி வடிவேலுவிடம் சொன்ன ரஜினி!
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


இப்போது பார்க்க இருக்கும் நட்சத்திரம் மிருகசீரிடம். இந்த நட்சத்திரம் ரிஷப ராசியில் முதல் இரண்டு பாதங்களும், மிதுன ராசியில் அடுத்த இரண்டு பாதங்களும் இருக்கும். இது தேவகண நட்சத்திரம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு கூடுதல் சிறப்புகள் உண்டு.


ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரம் என்பது சந்திரன் நின்ற ராசி. அதுவே ஜென்ம ராசி. அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் சந்திரன் நின்றதோ அதுவே ஜென்ம நட்சத்திரம். ஆக சந்திரனின் நிலையைக் கொண்டே ஒருவருக்கு ராசி மற்றும் நட்சத்திரம் முடிவாகிறது. அப்பேர்ப்பட்ட சந்திரன் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் தெரியுமா?


ஆமாம்... சந்திரன் பிறந்த ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம்.


உலகிற்கே ராசி நட்சத்திரம் குறித்து தருபவர் சந்திர பகவான். அவரே ஒரு ராசி நட்சத்திரத்தில் பிறப்பது என்பது பெருமைக்குரிய விஷயம்தானே!
எனவே இந்த மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், இயல்பாகவே குளிர்ச்சியான தேகத்தை உடையவர்கள். மேல் தோல் வெங்காய சருகு போல் மெல்லியதாக மென்மையாக இருக்கும். தலைமுடியும் மென்மையாக, மிருதுவாகத்தான் இருக்கும்.


அவர்கள் எந்த நிறமாக இருந்தாலும், முகத்தில் அழகும், பொலிவும், எவரையும் வசப்படுத்தும் வசீகரமும் இருக்கும். குளிர்ச்சியான கண்கள் உடையவர்களாக மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். நேர்த்தியான நாசி, வில் போன்ற புருவம், அளவான அகலமான நெற்றி, ஒட்டிய கன்னம், சீரான பல்வரிசை, மெலிந்த உடல்வாகு என்பவையெல்லாம் மிருக சீரிட நட்சத்திரக்கார்களின் தோற்ற அமைப்பு.

இந்த நட்சத்திரமானது வானில் முக்கோண வடிவில் இருக்கும். அதாவது மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு இது.
மான் தலை போன்ற வடிவம் கொண்டது. மூன்று நட்சத்திரங்கள் என்பதால் தேங்காயின் மூன்று கண்களை ஒத்த வடிவம் போன்றது. சிவபெருமானின் முக்கண் போன்றது என்றும் சொல்லலாம்.

இந்த மிருகசீரிடத்தில் பிறந்த மற்றொரு முக்கியமானவர் பரசுராமர்.


ஜமத்கினி முனிவர், ரேணுகா தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் . மிருகசீரிட நட்சத்திரமும் நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம். தந்தையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தன் தாயின் சிரசை கொய்தவர் பரசுராமர் எனும் சரிதம்தான் நமக்குத் தெரியுமே! .


இவர் தாயைக் கொல்ல முனைந்தபோது இவரின் தாய் ரேணுகா அபயம் கேட்டு அடைக்கலம் அடைந்தது பார்க்கவர்கள் எனும் மீனவர்களிடம். அவர்களையெல்லாம் தாண்டி, ஒரு மீனவப் பெண்ணின் தலையையும் தன் தாயின் தலையையும் வெட்டி வீழ்த்தினார் பரசுராமர்.
தந்தையிடம் வரம் பெற்று மீண்டும் தன் தாயை உயிர்ப்பிக்கும்போது தலை மாறி உயிர்ப்பித்தார். இந்த ரேணுகாவே நாம் வணங்கும் கருமாரியம்மன்.


அதனால்தான் கருமாரியம்மன் ஆலயங்களில் கருவறையில், அமர்ந்த கோலத்தில் இருக்கும் அம்மனின் காலடியில் சிரசு மட்டும் இருக்கும்படியாக அமைந்திருக்கும். அந்த சிரசு வடிவம்... ரேணுகா அம்மன்!


அதனால்தான் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், பொதுவாகவே தாயன்பு அதிகம் கொண்டவர்களாகவும் தந்தை மீதான அன்பும் பக்தியும் மிக மிக அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள், சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுவார்கள். நேர்மை தவறாதவர்கள். இரக்கம் அதிகம் உடையவர்கள். எந்தச் சூழ்நிலையிலும், எவ்வளவு நிர்ப்பந்தம் வந்தாலும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாதவர்கள். அதிகாரத்திற்கு கட்டுப்படாதவர்கள். அதேசமயம், அன்புக்குக் கட்டுப்படுபவர்கள்.


வேருக்கு நீர் ஊற்றினால், தலை மீது சுமந்து தாகம் தணிக்கும் தேங்காய்(இளநீர்) போல... என்பது மிருகசீரிடக்காரர்களின் குணம். நன்றி மறக்காதவர்கள். இவர்களுக்கு யாராவது எப்போதாவது சிறு உதவி செய்திருப்பார்கள். பிற்காலத்தில், அதையெல்லாம் மறக்காமல், அவர்களுக்கு அதிக நன்மைகளைச் செய்து நன்றிக்கடன் தீர்ப்பார்கள், இவர்கள்!


எந்த முயற்சிகளையும் சரியாக திட்டமிட்டு புயல் வேகத்தில் செய்து முடிப்பார்கள். தோல்விகள் இவர்களுக்கு எந்த பாதிப்பையும் தராது. மாறாக மேலும் உத்வேகத்துடன் செயல்படுவார்கள்.


இவர்கள் உணவுப் பிரியர்கள். ஒவ்வொரு வேளைக்கும் விதம்விதமான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று நினைப்பவர்கள்; செயல்படுபவர்கள்!


மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், செவிப்புலன் அதிகம் உடையவர்கள். காதால் கேட்டே தன் அறிவை வளர்த்துக்கொள்பவர்கள். பள்ளிக்கூட காலங்களில் கூட, வகுப்பில் பாடங்களை எழுதுவதைவிட, ஆசிரியர் நடத்தும் பாடங்களை கேட்டே சிறந்த மாணவர்களாக இருந்திருப்பார்கள். பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். காரணம் தொண்டை எனும் குரல் நாளம் மிருகசீரிட அம்சம்! .


இவர்கள், காது மூக்கு தொண்டை நிபுணராக இருப்பார்கள். கலைத்துறையில் ஆர்வம், எழுத்தாளர், ஒரு குழுவுக்குத் தலைமை, அரசியல் ஆர்வம், நிர்வாக மேலாண்மை, மக்கள் தொடர்பு, நிதி நிர்வாகம் முதலான துறைகளில் இருப்பார்கள்.


விவசாய இயந்திரத் தொழில், பூமி தொடர்பான இயந்திரங்கள் (பொக்லைன்) தொழில், விவசாய இடு பொருள் வியாபாரம், பதிப்பகம், அச்சுத்தொழில், பத்திரிகைத் தொழில், பேச்சுத் தொழில், நம்பிக்கை மற்றும் உற்சாகம் தரும் பேச்சு மற்றும் எழுத்துத் தொழில். உயர்தர உணவகங்கள், பெண்கள் விடுதிகள், உயர்தர மது விடுதிகள், மனமகிழ் மன்றம் முதலானவை இவர்களுக்கு அமையும்!


எப்போதும் உற்சாக மனநிலையில் இருப்பார்கள். சாகச விளையாட்டுக்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டுகளில் சாதிப்பவர்களாகவும் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் இருப்பார்கள்.


மேலும் மிருகசீரிடக் காரர்கள், தர்ம சிந்தனை அதிகம் உடையவர்களாகத் திகழ்வார்கள். எளிதில் மற்றவர்களை நம்பிவிடுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். இவர்களை ஆகாஓகோ என புகழ்ந்தால் போதும்... தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் அள்ளிக்கொடுத்து விடுவார்கள். அதேசமயம் இந்த புகழ் விருப்பத்தின் காரணமாகவே நிறைய இழப்புகளையும் சந்திப்பார்கள்!


ஒருமுறை பார்த்தால் போதும், கற்பூரமாக எளிதில் எதையும் கற்றுக்கொள்ளும் குணம் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு. எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்யமாட்டார்கள், அடிக்கடி தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு காரணம் புதுப்புது முயற்சிகள் செய்து பார்ப்பதில் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதேசமயம், எந்தத் தொழில் செய்தாலும் அதில் உச்சம் பார்க்காமல் ஓய மாட்டார்கள்.


உணவு இடைவேளை எல்லோருக்கும் ஒரு மணி நேரம் என்றால், இவர்களுக்கு பத்து நிமிடம் மட்டுமே போதுமானது. அவ்வளவு வேகமாகச் சாப்பிடுபவர்கள். அதேபோல, சாப்பிட்டவுடன் ஓய்வு எடுப்பது என்பதெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. உடனே அடுத்த வேலையில் இறங்கிவிடுவார்கள்.


மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு பேய் பிசாசு எல்லாம் கண்ணுக்கு தெரியுமாமே? உண்மையா? என்று என்னிடம் பலரும் கேட்பார்கள்.
இந்தத் தொடர் மூலம் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான்... ரஜினி வடிவேலுவிடம் ’சந்திரமுகி’ படத்தில், மிருகசீரிட நட்சத்திரத்தின் தனித்துவத்தைச் சொல்லியிருப்பார், ஞாபகம் இருக்கிறதா? மிருகசீரிடக்காரர்களுக்கு அமானுஷ்யங்களை உணரும் சக்தி உண்டு. ஆனால் அதனால் விளையும் பாதிப்பு இம்மியளவும் இருக்காது என்பதுதான் உண்மை.


ஆன்மீகம், ஞானம், ஜோதிடம், இறை உணர்வு, புரியாத புதிர்களுக்கும் விடை காணுதல், இவையெல்லாம் மிருகசீரிடத்தின் சிறப்பு அம்சங்கள். சந்திரன் பிறந்த நட்சத்திரம் என்பதே காரணம். சந்திரன் மனோகாரகன் மற்றும் அறிவுக்கும் காரகன். எனவேதான் மறைபொருளுக்கும் விடை காணும் திறன் இயல்பாகவே மிருகசீரிடக்காரர்களுக்கு இருக்கும்.


மிருகசீரிடத்தின் குணநலன்கள் இன்னும் உண்டு!


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

கருத்துப் பேழை

11 mins ago

சுற்றுலா

48 mins ago

சினிமா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்