27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள்  12 - அம்மன், பெருமாள், குரு பகவான், சக்கரத்தாழ்வார்!  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல், ரோகிணி நட்சத்திரம் குறித்த தகவல்கள் ஏராளம். தொடர்ந்து அந்த நட்சத்திர குணங்களையும் நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்துக்கொண்டிருந்தோம், நினைவிருக்கிறதுதானே.


இதோ... ரோகிணி நட்சத்திரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போமா?


ரோகிணி நட்சத்திரக்காரர்கள், செல்வாக்கும் சொல்வாக்கும் உடையவர்கள். ’நாயகன்’ படத்தில் ‘வாக்கு கொடுத்துட்டேன் வேலு’ என்றொரு வசனம் ரொம்பவே பிரபலம். ரோகிணி நட்சத்திரக்காரர்களும் அப்படித்தான். வாக்கு கொடுத்துவிட்டால் அதை நிறைவேற்றுவதற்காக கடும் பிரயத்தனம் செய்வார்கள். அந்த வாக்கை காப்பாற்றியே தீருவார்கள். எடுத்துக்கொண்ட வேலையில் எவ்வளவு நேர்த்தி இருக்குமோ, அதேபோல, தானும் சரி, தன்னைச் சுற்றியிருப்பவர்களும் இருப்பவைகளும் சரி... நேர்த்தியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வாசனாதி திரவியங்களை அதிகம் விரும்புவார்கள்.


தங்கள் ஆரோக்கியத்தை சரியாக பராமரிப்பவர்கள். ஆனாலும் கவனமாக இருக்கவேண்டியதும் உண்டு. அதாவது, உணவில் கட்டுப்பாடு மிக மிக அவசியம். அதிக சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


இயல்பாகவே ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு குளிர்ந்த நீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று வகை நோய்களில், ரோகிணி நட்சத்திரம் என்பது கபம் எனும் பிரிவைச் சேர்ந்தது. எனவே, எளிதில் சளித் தொல்லை, நுரையீரல் தொற்று, சளி இருமல், தலை பாரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் முதலான பிரச்சினைகளை அடிக்கடி சந்திப்பார்கள். எனவே, முடிந்தவரை குளிர்ந்த உணவுகளை தவிர்த்து விடவேண்டும். அதேபோல குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக, இளநீர், தர்பூசணி, முள்ளங்கி போன்றவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.
ரோகிணி நட்சத்திரம் என்றாலே, சந்திரன் ரிஷப ராசியில் இருப்பதாக அர்த்தம். ஆக சந்திரன் உச்சம் என்பதை தெளிவாக உணரலாம். இப்படி சந்திரன் உச்சமாக இருக்கும் ஜாதகர் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பலசாலியாக இருப்பார். பெரிய அளவிலான நோய்த் தாக்கங்கள் ஏற்படாது.


அதேபோல, பொருளாதாரக் கஷ்டம் என்ற நிலை எப்போதும் வராது. பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கும். ஆனால் அதற்குத் தேவையான உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இனி, ரோகிணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக விவரங்களைப் பார்ப்போம்.

ரோகிணி 1ம் பாதம் -
செயல்வீரர்கள் எனக் கேள்விப்பட்டு இருப்போம் அல்லவா! அது இவர்கள்தான். எடுத்துக்கொண்ட செயல்களில் மற்றவர்கள் வியக்கும் வகையில் துரிதமாக வேலைகளை முடித்துக் காட்டுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இவருக்கென்று தனி முத்திரை இருக்கும். அனைவராலும் பாராட்டப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள். அதேசமயம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களும் இவர்கள்தான்!

கோபம் வந்தால் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் வரும். அதேசமயம், எவ்வளவு வேகத்தில் கோபப்பட்டாரோ, அதேவேகத்தில் தன் கோபத்தை சட்டென்று தணித்துக் கொள்பவராகவும் இருப்பார்கள்.

கட்டுமானத் தொழில் முதல் சிறு நிறுவனங்கள் நடத்துவது வரையிலான தொழில்கள் அமையும். உணவகங்கள், கேட்டரிங் தொழில் போன்றவையும் சிறப்பாக இருக்கும். விவசாயம் சார்ந்த தொழில்களும் செம்மையாக இருக்கும். குறிப்பாக ஆடு, மாடுகள் வளர்த்தல் நல்ல லாபத்தைத் தரும்.

எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். அதீத சுறுசுறுப்பு உடையவர்களாகத் திகழ்வார்கள். உதாரணமாக எல்லோரும் லிப்டில் ஏறிச் செல்கிறார்கள் என்றால், இவர்கள் படிக்கட்டுகளில் ஏறி விறுவிறுவெனச் செல்வார்கள். காத்திருத்தல் என்பது இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம்!

இதன் காரணமாக, இவருக்கு உடல் நலத்தில் ஒரு சில பிரச்சினைகள் உண்டுபண்ணும். குறிப்பாக ரத்த அழுத்தம் முதலான பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரோகிணி முதல் பாதக்காரர்கள், நிதானத்தை கடைபிடிப்பதும், பொறுமையாக இருப்பதும், உணர்ச்சிவசப்படாமல் இருப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

விருட்சம்- நாவல் மரம்
இறைவன் - சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்). ஸ்ரீரங்கத்தில் தனிச்சந்நிதியில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு விளக்கேற்றி வழிபடுவதும், மிளகு சாதம் நைவேத்தியம் செய்வதும் மிகவும் சிறப்பு.

வண்ணம் - தூய வெண்மை, இளம் சிவப்பு.

திசை - தென்கிழக்கு
**************************************************

ரோகிணி 2ம் பாதம் -

பொறுமையின் சிகரம் எனப்படுபவர்கள், ரோகிணி நட்சத்திரத்தின் 2ம் பாதக்காரர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாகவும், கவனமாகவும், ஆழ்ந்து சிந்தித்தும் செயல்படுவார்கள் இவர்கள்.

கற்பனை வளம் இவர்களுக்குள் அருவியாய் கொட்டும். யாரும் யோசிக்காத விஷயத்தை இவர்கள் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவார்கள். உதாரணமாக அலுவலகக் கருத்து பரிமாற்றத்தில், அனைவரும் ஒரு கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கும்போது, இவர்கள் வேறு கோணத்தில் அந்த பிரச்சினையை அணுகி எளிதாகவும் புதிதாகவும் தெளிவாகவும் தீர்வு சொல்வார்கள்.


இப்படி எந்த விஷயத்திலும் ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதக்காரர்களின் பார்வை வித்தியாசமாகவே இருக்கும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், நடிகர் பார்த்திபன் அவர்களின் புதிய முயற்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் என்பது நாம் அறிந்ததே, இதுபோன்ற வித்தியாசமான சிந்தனைகளைக் கொண்டவர்கள்தான், ரோகிணி 2ம் பாதக்காரர்கள்.

இவர்களுக்கு திரைத்துறை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கதை, கவிதை, எழுத்து, இசை, நாடகம், நாட்டியம் போன்ற துறைகளும் இவர்களுக்கு பிடித்தமான துறைகள். இந்தத் துறைகளில், மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் அதில் ஜொலிப்பவர்களாகவும் ஜெயிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு படிப்படியாக பணம் சேர்ப்பதை விட, ஒரே வியாபாரத்தில் பெரும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். மேலும் தன் எதிர்காலம் குறித்த கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள் இந்த கற்பனையும் கனவும் நிச்சயம் ஒருநாள் நிஜமாக மாறும் என்பதுதான் ரோகிணி நட்சத்திரக்காரர்களின், ரோகிணியின் 2ம் பாதக்காரர்களின் தனிச்சிறப்பு! .

சொந்தத் தொழில் செய்யும் ஆர்வத்தை விட அல்லது உத்தியோகத்திற்குச் செல்வதை விடவும், வியாபார விஷயங்களில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஆடை, ஆபரணம் முதலான வியாபாரங்களைச் செய்வதில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உணவு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அப்போது சமைத்த உணவைச் சாப்பிட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இருக்காது. எடுத்து வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது என்பது அறவே இருக்கக்கூடாது.

இவர்களுக்கு அதிகப்படியாக வரக்கூடிய பிரச்சினைகள் என்னவென்று பார்த்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வரும்.

விருட்சம்- மந்தாரை மரம்

இறைவன்- ஸ்ரீ தேவி கருமாரியம்மன். மற்றும் புற்று உள்ள அம்மன் ஆலயங்கள்.

வண்ணம் - வெள்ளை நிறம் (பளபளப்பு), இளநீலம்.

திசை - தெற்கு.
****************************************************************************
ரோகிணி 3ம் பாதம் -

கலகலப்பு, நகைச்சுவை, எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் போன்ற குணங்களை உடையவர்கள், ரோகிணி நட்சத்திரத்தின் 3ம் பாதக்காரர்கள்.


கல்வி ஆர்வம் அதிகமாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.


புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சியில் வெற்றியும் காண்பார்கள். சகோதர பாசம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள். சகோதரர்களுக்காக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருக்கும்.

எந்த ஒரு விஷயத்தைக் கேட்டாலும் அது தனக்கு முன்பே தெரியும் என்கிற அலட்சியப் போக்கும் இருக்கும். நடக்காத ஒன்றை நடந்தது போலவே கதை கட்டிவிடுவதில் மன்னர்கள்.

பத்திரிகை, ஊடகம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நூலகம், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் போன்ற துறைகளில் பணி செய்வதில் ஆர்வம் உடையவர்கள்.

சொந்தத் தொழில் செய்வதில் பெரிய ஆர்வம் ஏதும் இருக்காது. சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுதான் இருப்பார். தொழில் என்பது இவருக்கு பகுதிநேரமாகத்தான் அமையும்.

பெரிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏதும் வராது. ஆனால் தோலில் நமைச்சல், அலர்ஜி போன்றவை இருக்கும்.

விருட்சம்- மந்தாரை

இறைவன்- மகாவிஷ்ணு

வண்ணம் - வெள்ளை மற்றும் இளம்பச்சை.

திசை - மேற்கு
***********************************************************

ரோகிணி 4ம் பாதம் -

தாயின் மீது அன்பு அதிகம் உடையவர்கள் தாயாரின் அதீத அன்பு வளர்ப்பவர்கள் தாயாருக்குக் கட்டுப்பட்டவர்கள் இன்னும் சொல்லப்போனால் அன்னையால் ஆளாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், ரோகிணி நட்சத்திரத்தின் 4ம் பாதக்காரர்கள்.

இரக்க குணம் அதிகம் உடையவர்கள். பகைவரையும் மன்னிக்கும் குணம் உடையவர்கள். எல்லோரிடமும் அனுசரித்துச் செல்பவர்களாக இருப்பார்கள்.

பயணங்களில் அதிகம் ஆர்வமுடையவர்கள். கடல் கடந்து செல்வது தனது லட்சியமாக வைத்திருப்பவர்கள். நிச்சயமாக கடல் கடந்து செல்வார்கள்.

தனது மகிழ்ச்சி மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதன் காரணமாகவே சின்ன சின்ன பொய்களை சொல்பவர்கள் அது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பொய்யாக இருக்கும்.

உறவினர்களிடம் அதிக நேசம் வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முதலில் ஓடிச்சென்று உதவுவார்கள். தான் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் எதிர்பார்க்க மாட்டார்கள்.

டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், ஓட்டுனர், நடத்துனர் முதலான துறைகளில் இருப்பார்கள்.மேலும் கலைத் துறை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். குறிப்பாக கவிதை, பாடல்கள் எழுதுவது, ஓவியம் வரைவது, சிற்பக்கலை போன்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.

தேவையான உதவிகள் மட்டும் கிடைத்தால் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். முடிந்தவரை தன் சுய முயற்சியிலேயே முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

அரசு வேலைகளில் பணியாற்ற விரும்புபவர்கள். குறிப்பாக கப்பல் படையில் வேலை செய்ய விரும்புவார்கள்.

சொந்தத் தொழில் என்றால் உணவகம் நடத்துதல், கேட்டரிங் தொழில், காய்கறி மொத்த வியாபாரம், மளிகைக் கடை, பால் தயிர் விற்பனை, மீன் வியாபாரம், மீன் வளர்ப்புத் தொழில் இதுபோன்ற தொழில்கள் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

ஆரோக்கியத்தில் இவர்களுக்கு மிக முக்கியமாக வீசிங் எனும் மூச்சிரைப்பு பிரச்சினை, நுரையீரலில் தொற்று, சளித் தொல்லை அதிகமாக இருக்கும். பின் கழுத்து வலி, சிறுநீரக பிரச்சினைகள் போன்றவை வருவதற்கு வாய்ப்பு உண்டு.

தூய்மையான ஆடைகளை அணிவதில் விருப்பம் உடையவர்கள். ஆனால் அந்த ஆடைகளில் பெரிய அளவுக்கு ஆடம்பரம் ஏதும் இருக்காது. எளிமையான தோற்றத்தில் மிக அழகாக காட்சியளிப்பார்கள் ரோகிணி 4ம் பாதக்காரர்கள்.

விருட்சம்- நாகலிங்க மரம்

இறைவன்- குரு பகவான்

வண்ணம் - வெள்ளை மற்றும் மஞ்சள்

திசை - வடக்கு

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குறித்து ஏ டூ இஸட் தகவல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் இந்த நட்சத்திரமாக இருந்தாலோ, உங்கள் வீட்டில் இந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலோ, உங்கள் நண்பர்களோ உறவினர்களோ ரோகிணி நட்சத்திரக்காரர்களாக இருந்தாலோ... இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இந்தத் தகவலையெல்லாம் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.


இனி, மிருகசீரிடம் நட்சத்திரம் பற்றி பார்ப்போம்.


- வளரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்