Published on : 03 Jun 2023 12:58 pm
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள்: விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து கிரேன்களும் வரவழைக்கப்பட்டு, துரித கதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.
பாலசோர் மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மருத்துவக் குழுக்களும் விரைந்தன. அங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் அனைவரும் பாலசோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு, நிவாரணப் பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து காரணமாக அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகள் மீட்பு நடவடிக்கைகளில் அவசர படையினருக்கு உதவினர். ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர 54 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழு, விமானப்படையினர் என மொத்தம் 600 பேர் மீட்புப் பணியில் தங்களை ஈடுபட்டதாக ஒடிசா தலைமைச்செயலாளர் தெரிவித்தார். எனினும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்தது.
ரத்த தானம்: விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்துள்ளதாக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் பாண்டா தெரிவித்துள்ளார். "ரத்த தானம் செய்ய இளைஞர்கள் மிகப் பெரிய ஆர்வத்தைக் காட்டி வருகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் முன்வந்ததில் இதுவரை 3000 யூனிட்டுக்கும் அதிகமாக ரத்தம் பெறப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து நிலவரம் குறித்து சனிக்கிழமை பிற்பகல் ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் விபத்துப் பகுதியில் ரயில்வே துறை மேற்கொண்டுவந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான 'கவாச்' கிடைக்கவில்லை. இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒடிசா மாநில அமைச்சர் அடானு சப்யசாசி நாயக், “எங்களின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே. மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க வேண்டுமென முதல்வர் தெரிவித்துள்ளார்" என்றார்.
விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “இது ஒரு துயர்மிகு விபத்து. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த உயர் சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார்” என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிகழ்விடத்தில் மம்தா பானர்ஜி: சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்" என தெரிவித்தார்.
சிறப்பு ரயில்கள்: ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.
தமிழக அமைச்சர் தகவல்: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஒடிசா முதல்வர் ஆறுதல்: விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இது மிகவும் துயரான விபத்து. உள்ளூர் மக்களுக்கும் குழுக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ரயில்பாதுகாப்புக்கு எப்போதுமே முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி: இந்த விபத்தை அடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். மேலும், இன்றே சம்பவ இடத்துக்கு பிரதமர் வர உள்ளதாகவும், ரயில் விபத்தில் காயமுற்று கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் விபத்துப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு அதன் பிறகு பாலாசோர் மருத்துவமனைக்கு பிரதமர் செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு தகவல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் அமைச்சர்கள் குழு விரைந்துள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு ஒன்றினையும் உடனடியாக அனுப்பி வைத்தார். அவர்கள் இன்று (3.6.2023) காலை ஒடிசா மாநிலத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.
அங்கிருந்து அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்திற்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் விரைந்துள்ளனர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளனர்.
அமைச்சர்கள் கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் தமிழக அரசிற்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. | படங்கள்: திப்யாங்ஷு சர்க்கார்