மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில் - திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேன் ஓட்டுநர் சரண் :

சுரேஷ்குமார்.
சுரேஷ்குமார்.
Updated on
1 min read

கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது வேனை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் அதன் ஓட்டுநர் சுரேஷ்குமார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

கரூர் அருகே வெங்கக்கல்பட்டியில் நவ.22-ம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் உயிரிழந்தார். தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் ஜவுளி நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் எனத் தெரியவந்தது. வேனை கைப்பற்றிய போலீஸார் அதன் ஓட்டுநரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், வேன் ஓட்டுநரான கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள குன்னுடைய கவுண்டனூரைச் சேர்ந்த திருப்பதி மகன் சுரேஷ்குமார்(28) திண்டுக்கல் ஜேஎம்.-1 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவரை நவ.30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் லலிதாராணி உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டுநர் சுரேஷ்குமார் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in