

நீண்டகாலமாக தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று. இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் 2009-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இடம் பெயர்ந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியையும் இணைத்து 2009-ம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பலமுறை காங்கிரஸ் இங்கு வென்றது. இருப்பினும் திமுக, அதிமுகவுக்கு அதிகமாக வாக்கு வாங்கி உள்ளது. இதை தவிர பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உண்டு.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இங்கு போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸின் வள்ளல் பெருமான், பாமகவின் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரும் எம்.பி.யாக இருந்த தொகுதி.
இத்தொகுதியில் பலமுறை தேர்தல் களம் கண்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். 1999 மற்றும் 2004-ம் ஆண்டு தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் பாமக வேட்பாளர் பொன்னுசாமியிடம் தோல்வியடைந்தார்.
இருப்பினும் இரண்டாம் இடம் பிடித்தார். அதேசமயம் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமகவின் பொன்னுசாமியை வீழ்த்தி வென்றி கண்டார் திருமாவளவன்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
கட்சி
| வேட்பாளர் | வாக்குகள் |
| அதிமுக | சந்திரகாசி | 4,29,536 |
| விசிக | திருமாவளவன் | 3,01,041 |
| பாமக | சுதாமணிரத்தினம் | 2,79,016 |
| காங் | வள்ளல் பெருமான் | 28,988 |
சிதம்பரம் தொகுதியைப் பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தாண்டியும் திருமாவளவனுக்கென தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைபற்றியது.
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
| தொகுதி | வேட்பாளர் | கட்சி |
| சிதம்பரம் | பாண்டியன் | அதிமுக |
| காட்டுமன்னார்கோவில் (எஸ்சி) | முருகுமாறன் | அதிமுக |
| புவனகிரி | சரவணன், | திமுக |
| அரியலூர் | ராஜேந்திரன் | அதிமுக |
| ஜெயங்கொண்டம் | ராமஜெயலிங்கம் | அதிமுக |
| குன்னம் | ராமசந்திரன் | அதிமுக |
மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதுமட்டுமின்றி இத்தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் விசிக அதிகமான வாக்குகளைப் பெற்றது. புவனகிரி தொகுதியில் 33 ஆயிரத்துக்கும் அதிமான வாக்குகளைப் பெற்றது.
தனது ஆதரவு தளம் மட்டுமின்றி, தனது வாக்கு வங்கியையும் நம்பி களம் இறங்கியுள்ளது அதிமுக. அக்கட்சியின் சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.அதேசமயம் விசிக மட்டுமின்றி திமுகவுக்கும் இங்கு வலிமையான வாக்கு வங்கி உண்டு.
ஒரு சில பகுதிகளில் காங்கிரஸுக்கு வாக்குகள் இருப்பது கூட்டணிக்கு வலு சேர்க்கிறது. அமமுக உட்பட மற்ற கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாததால் அதிமுக மற்றும் விசிக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
குடிநீர் பிரச்சினை தொடங்கி சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் வரை பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் இந்தத் தொகுதியில் தேர்தலில் சாதி ரீதியான வாக்குகள் மிக முக்கியமானவை. தேசிய, தமிழக அளவிலான பிரச்சினைகளுடன், சாதி ரீதியிலான வாக்குகளே இத்தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்.