

கடலூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டு சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் வருகின்ற திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று (ஜூன்14) ஆட்டு சந்தை நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை பெரம்பலூர், கள்ளக்குறிச்சி சேலம், தேனி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டத்திலிருந்து வியாபாரிகளும், வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகளும் குவிந்து போட்டி, போட்டுக் கொண்டு விற்பனை நடைபெற்றது.
இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக பகல் நேரத்தில் இந்த ஆட்டு சந்தை நடைபெறும். இம்முறை இரவு தொடங்கி அதிகாலை வரை நடந்த சந்தையில், ஆடுகள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. மொத்தமாக ரூ. 10 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நல்ல விலை கிடைத்தாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.