‘எஃப்சிஆர்ஏ’ மசோதாவும், எதிர்க்கட்சிகள் அதிருப்தியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, FCRA எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026 வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்தில் என்னென்ன தொண்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்கள், அதாவது என்ஜிஓக்கள் உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு நன்கொடைகளை ஒருபோதும் மதமாற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது. என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நன்கொடைகளால் உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 15,212 என்ஜிஓக்களின் பதிவு காலாவதியாகி உள்ளது. சுமார் 14,449 என்ஜிஓக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
FCRA மசோதாவின் மூலம் உரிம பதிவு ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதே காரணத்தை சுட்டிக்காட்டி பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் மதம் சார்ந்த என்ஜிஓக்களும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த மசோதாவை நிறைவேற்ற மக்களவை, மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற திமுக எம்.பி வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆகஸ்ட் 6 அன்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.
2026 மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட FCRA திருத்தச் சட்ட முன்வரைவு 2026-ஐத் திரும்பப் பெறவும், FCRA சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.
சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.