அமெரிக்காவின் ‘ஆயில்’ அரசியலும், டாலர் ‘ஆதிக்க’ உத்திகளும்!
வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்தது. இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் முதலான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்தாலும் கூட, வெனிசுலா மீதான நடவடிக்கைகளின் பின்னணியின் அமெரிக்காவின் எண்ணெய் - டாலர் ஆதிக்க அரசியலே மேலோங்கியிருப்பது தெளிவு.
உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18 சதவீதம் வெனிசுலாவில் உள்ளது. அதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 15 சதவீதம், ஈரானில் 12 சதவீதம், கனடாவில் 10 சதவீதம், ஈராக்கில் 8.5 சதவீதம், குவைத்தில் 6 சதவீதம், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5.8 சதவீதம், ரஷ்யாவில் 4.7 சதவீதம், லிபியாவில் 2.9 சதவீதம், அமெரிக்காவில் 2.6 சதவீதம் எண்ணெய் வளம் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விற்பனை தொடர்பாக கடந்த 1970-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன்படி அமெரிக்க டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய் வணிகம் நடைபெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் உலகின் எண்ணெய் வணிகம் 100 சதவீதம் அளவுக்கு அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்தது.
உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான எண்ணெய் வணிகத்தில் ரஷ்யாவின் ரூபிள், சீனாவின் யுவான் கரன்சி பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உலக எண்ணெய் வளத்தில் முதலிடத்தில் இருக்கும் வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடிக்கிறது. இதன் எதிர்விளைவாக வெனிசுலாவின் எண்ணெய் வணிகத்தில் சீனா ஆழமாக கால் பதித்து உள்ளது.
வெனிசுலாவில் இருந்து சுமார் 70 முதல் 90 சதவீத கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்து வந்தது. இரு நாடுகள் இடையே யுவான் கரன்சியில் எண்ணெய் வணிகம் நடைபெற்றது. இதன் காரணமாக உலக கச்சா எண்ணெய் வணிகத்தில் அமெரிக்க டாலரின் பங்கு 100-ல் இருந்து 80 சதவீதமாக குறைந்து உள்ளது.
ரஷ்யாவின் ரூபிள், சீனாவின் யுவான், இந்திய ரூபாயில் சுமார் 20 சதவீத எண்ணெய் வணிகம் நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் எண்ணெய் வணிகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து, இதர நாடுகளின் கரன்சிகள் கோலோச்ச தொடங்கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையாகவும் வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அமெரிக்கா அடித்திருக்கிறது.
வரும் காலத்தில் வெனிசுலாவின் ஒட்டுமொத்த எண்ணெய் வளமும் அமெரிக்காவின் வசமாகி டாலரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதோடு சீனாவின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இதனிடையே, எண்ணெய் அரசியலின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், “அடிப்படையில் என்னை மகிழ்ச்சிப்படுத்தவே இந்தியா விரும்புகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்.
என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது. இந்தியா மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முன்னதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறும்போது, “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ராவை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பை வாபஸ் பெறுமாறு இந்திய தூதர் கோரிக்கை விடுத்தார். இதற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அமெரிக்காவின் அறிவுரையால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்திருக்கிறது.
அமெரிக்காவில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற திட்டமிட்டு உள்ளோம். இதன்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழிவகை செய்யப்படும்” என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.