சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். | படம்: வேளாங்கண்ணி ராஜ்
கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த பிறகும், பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பணி முடிவடையும் நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
சிஎம்டிஏ சார்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லும் பாதையில் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
அனைத்து பணிகளும் முடிந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு, பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் சனிக்கிழமை பேருந்து முனையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். | படம்: வேளாங்கண்ணி ராஜ்
கிளாம்பாக்கம் பேருந்து முனையமானது ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பேருந்து சேவையையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.| படம்: வேளாங்கண்ணி ராஜ்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்தே இனி தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். | படம்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னை மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல எதுவாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படவுள்ளது. இரவு நேரப் பேருந்துகளுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
தமிழகத்திலேயே மிகப் பெரிய பேருந்து முனையம் இதுவே. 88.52 ஏக்கரில் இப்புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
பயண சீட்டு பெறுமிடம், பயணிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல கை வண்டிகள், மின் வாகனங்கள், தூய்மை இயந்திரங்கள், மின் தூக்கிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு உணர்வு தரையமைப்பு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.| படம்: வேளாங்கண்ணி ராஜ்
பேருந்து முனையத்தில் 100 கடைகள், இரண்டு அடி தளங்களில் 2769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம் உள்ளன.| படம்: வேளாங்கண்ணி ராஜ்
ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கான ஒப்பனை அறைகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனித்தனியாக 140 (100+40) ஓய்வறைகள், ஓட்டுநர்களுக்கு தனியாக 340 ஓய்வறைகள் (படுக்கை வசதியுடன்), ஏடிஎம் வசதி, வரைபட வசதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
SETC, TNSTC, ஆம்னி பேருந்துகளுக்கு 16 நடைமேடைகளை கொண்ட 215 பேருந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசு பேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.| படம்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
ஒரேநாளில் 2310 பேருந்துகளை இப்பேருந்து முனையத்தில் இருந்து இயக்க முடியும். சுமார் 800க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு MTC பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் மாநகர போக்குவரத்து கழக முனையம் ஜி.எஸ்.டி சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
பூங்காக்கள், நீர் வளங்கள், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, முக அடையாளம் காட்டும் கேமிராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்
நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக 15 வருடத்துக்கு இப்பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பினை ஒரு தனி செயல்பாட்டாளரிடம் ஒப்பந்த வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. | படம்: வேளாங்கண்ணி ராஜ்