

அம்மான்: ஜோர்டானில் உள்ள ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியாவில் புதிய வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் அதன் விரைவான வளர்ச்சியில் நீங்கள் ஒரு பங்காளியாக மாறுவதோடு, உங்கள் முதலீடுகளுக்கு சிறந்த வருமானத்தையும் பெறலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று மன்னருடனான எனது உரையாடலின்போது புவியியலை வாய்ப்பாகவும், வாய்ப்பை வளர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். மன்னரின் தலைமையின் கீழ் ஜோர்டான், பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்க பெரிதும் உதவும் ஒரு பாலமாக மாறியுள்ளது.
ஜோர்டான் மூலம் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் சந்தைகளை எவ்வாறு அணுக முடியும் என்பதை மன்னர் நேற்று விவரித்தார். இங்கு வருகை தந்துள்ள இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா, ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி. வணிக உலகில் எண்கள் முக்கியம் என்பதை நான் அறிவேன். ஆனால், எண்களை எண்ணுவதற்கு மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. நீண்டகால அடிப்படையில் உறவுகளை உருவாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
குஜராத்தில் இருந்து ஜோர்டானின் பெட்ரா நகரம் வழியாக ஐரோப்பாவுக்கு மிகப் பெரிய அளவில் வர்த்தகம் நடந்த காலம் ஒன்று இருந்தது. அந்த இணைப்புகளை நாம் புதுப்பிக்க வேண்டும். இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேகமாக முன்னேறி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வளர்ச்சி எண்கள், உற்பத்தித்திறன் சார்ந்த நிர்வாகம் மற்றும் புதுமை சார்ந்த கொள்கைகளின் விளைவாகும்.
இன்று ஜோர்டானில் உள்ள ஒவ்வொரு வணிகருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியாவில் புதிய வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்தியாவின் விரைவான வளர்ச்சியில் நீங்கள் ஒரு பங்காளியாக மாறலாம். மேலும், உங்கள் முதலீடுகளுக்கு சிறந்த வருமானத்தையும் பெறலாம். இன்று உலகுக்கு புதிய வளர்ச்சி இயந்திரங்கள் தேவை. உலகுக்கு நம்பகமான விநியோகச் சங்கிலி தேவை. உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவும் ஜோர்டானும் இணைந்து முக்கிய பங்கு வகிக்க முடியும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் அனுபவம், ஜோர்டானுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யுபிஐ, ஆதார், டிஜிலாக்கர் போன்ற எங்கள் கட்டமைப்புகள் உலகளாவிய அளவுகோல்களாக மாறி வருகின்றன. மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைகளிலும் பல சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்திய நிறுவனங்கள் ஜோர்டானில் மருந்துகள் மற்றம் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்தால் அது ஜோர்டான் மக்களுக்கு மட்டுமல்லாது, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவுக்கும் நம்பகமான மையமாக மாற முடியும். இதேபோல், வறண்ட காலநிலையில் விவசாயம் செய்வதில் இந்தியா விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்த அனுபவம் ஜோர்டானில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜோர்டானில் ரயில்வே மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை மன்னர் பகிர்ந்து கொண்டார். எங்கள் நிறுவனங்கள், அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் திறன் கொண்டவை மற்றும் ஆர்வமுள்ளவை என்பதை நான் அவருக்கு உறுதிபட தெரிவிக்க விரும்புகிறேன். சிரியாவில் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புத் தேவைகள் குறித்தும் நேற்று மன்னர் பேசினார். இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய மற்றும் ஜோர்டானிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
புவியியல் ஜோர்டானின் பலம். இந்தியா திறமை மற்றும் அளவை கொண்டுள்ளது. இந்த பலங்கள் ஒன்றிணைந்தால் அது இரு நாடுகளின் இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். நாம் ஒன்றாக முதலீடு செய்வோம்; ஒன்றாக புதுமை செய்வோம்; ஒன்றாக வளருவோம். இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.
முன்னதாக, இந்தியா - ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. நீர்வள மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 3. பெட்ரா மற்றும் எல்லோரா இடையே இரட்டை நகர ஒப்பந்தம். 4. 2025-2029 ஆண்டுகளுக்கான கலாச்சார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல், 5. டிஜிட்டல் மாற்றத்துக்காக வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒத்துழைப்பு.
தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து எத்தியோப்பியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை ஜோர்டான் இளவரசர் அல் ஹூசைன் பின் அப்துல்லா II, விமான நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்றார். காரை இளவரசரே ஓட்டிச் சென்று பிரதமரை வழி அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.