‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா மக்களவையில் அறிமுகம் - திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா மக்களவையில் அறிமுகம் - திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​தின் பெயரை ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என மாற்றும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) [Viksit Bharat — Guarantee For Rozgar And Ajeevika Mission (Gramin)] அதாவது VB-G RAM G என இந்த மசோதாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது. இது மிகவும் புரட்சிகரமான சட்டம். இந்த சட்டம் இயற்றப்பட்டபோது அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டன. ஏழைகளிலும் ஏழைகளுக்கு இது 100 நாள் வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்த மசோதா, வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையை பலவீனப்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​துக்கான மானியங்களில் 90% மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த மசோதாவின் கீழ் பெரும்பாலான மாநிலங்கள் 60% நிதியை மட்டுமே பெறும். இது மாநில அரசுகளின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இந்த மசோதா மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் அதன் பொறுப்பைக் குறைக்கிறது.

இந்த மசோதா வேலை நாட்களை 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்துவது குறித்து பேசுகிறது. ஆனால், ஊதிய உயர்வு குறித்து குறிப்பிடவில்லை. ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் மாற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் வெறி எங்களுக்குப் புரியவில்லை. இந்த மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதவை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக புதிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

இந்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ‘‘இந்த திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது தவறான முடிவு. இது இந்த முக்கியமான திட்டத்தின் ஆன்மா மற்றும் தத்துவ அடித்தளத்தின் மீதான தாக்குதல். மகாத்மா காந்தியின் ராமராஜ்ஜியக் கனவு ஒருபோதும் முற்றிலும் அரசியல் திட்டமாக இருக்கவில்லை. இது கிராமங்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒர சமூக பொருளாதார திட்டம். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது என்பது இத்திட்டத்தின் திசையையும் அதன் வரலாற்று நியாயத்தையும் அகற்றுவதற்கு ஒப்பாகும்.

இந்த மசோதா, இந்த திட்டத்தின் நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் மீது சுமத்துகிறது. இது முழு திட்டத்தையும் சாத்தியமற்றதாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகும். குறிப்பாக எழை மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை சாத்தியமற்றதாக்கும். ஊதியத்தை வழங்குவதில் தாமதம், வேலை நாட்களின் எண்ணிக்கை குறைப்பு, இறுதியில் திட்டத்தின் அழிவு என இது முடிவுக்கு வரும்” என குற்றம் சாட்டினார்.

இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, இந்த மசோதா மூலம் தேசப்பிதா கேலி செய்யப்படுகிறார் எனக் குறிப்பிட்டார்.

‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா மக்களவையில் அறிமுகம் - திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
மே.வங்கத்தில் நீக்கப்பட்ட 58+ லட்சம் வாக்காளர்கள் பெயர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்கள் கோரலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in