

புர்ஜ் கலீபா கட்டிட உரிமையாளர் முகமது அலப்பார்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் துபாயில் உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை இமார் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான முகமது அலப்பார் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற எமிரேட்ஸ் உச்சி மாநாட்டில் முகமது அலப்பார் பேசியதாவது: எங்களது நிறுவனம் வளைகுடா நாடுகளின் பல்வேறு இடங்களில் கட்டிடங்களை உருவாக்கி வருகிறது. எங்களது நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தியர்களே பணியாற்றுகின்றனர். கடின உழைப்பு, ஒழுக்கம், தொழில் தர்மத்துக்கு புகழ்பெற்றவர்கள் இந்தியர்கள்.
அதனால்தான் அவர்களை எனது நிறுவனத்தில் அதிகமாக பணியமர்த்துகிறேன். கடின உழைப்பாளிகள் எனது பார்வையில் கடின உழைப்புதான் சிறந்தது என்று கூறுவேன். எப்போதுமே கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கக் கூடியவன் நான். இந்தியர்கள் கடின உழைப்புக்குச் சொந்தக்காரர்கள். கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களின் பணி அர்ப்பணிப்பு அபரிமிதமானது.
இந்தியர்கள் தங்கள் வேலைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பதால், ஒரு நாளின் எந்த நேரத்திலும் வேலைக்கு வரத் தயாராக இருக்கின்றனர். ஒருவர் எவ்வளவு கடினமாக உழைக்கிறாரோ, அவ்வளவு அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைக்கும். அதிகாலை ஒரு மணிக்கு தொலைபேசியில் அழைக்கும்போது கூட இந்தியர்கள் அந்த அழைப்புகளுக்கு பதில் அளிக்கின்றனர். அவ்வளவு கடின உழைப்பாளிகள் அவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.