இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்.
மேற்காசிய மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும் ஈரானும் முன்வந்ததை அடுத்து அதற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான தூதுக்குழு இன்று காலை இஸ்லாமாபாத் வந்தது. ஜே.டி.வான்ஸ் உடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உடன் வந்துள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் உடன் இருந்தனர். இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்க பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபா தலைமையிலான அந்நாட்டின் தூதுக்குழுவினரும் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எனினும், அமெரிக்க மற்றும் ஈரான் தூதுக்குழுக்கள் சந்திப்பு குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இரு தரப்பும் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்களா அல்லது பாகிஸ்தான் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. மேலும், அவசரகாலப் பணியாளர்களை இஸ்ரேல் திட்டமிட்டு குறிவைப்பதாகவும் அது கண்டனம் தெரிவித்துள்ளது.