“மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா

“மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா
Updated on
1 min read

பாக்முண்டி (மேற்கு வங்கம்): மேற்கு வங்கத்தில் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பாஜக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவது உறுதி என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாக்முண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “மேற்கு வங்கத்தில் குர்மி மற்றும் சந்தால் சமூகத்தவர் இடையே மோதல்களை தூண்டிவிடும் வேலையை முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறார். குர்மி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதில் அவர் துளியும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாஜக ஆட்சி அமைந்ததும் மிகச் சிறந்த குர்மி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்க நாங்கள் முழுமையாக பாடுபவோம்.

ஊடுருவல்காரர்கள்தான் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள். அவர்களை மம்தா அரசு மேற்கு வங்கத்தில் குடியேற்றியுள்ளது. அவரது ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மே 5ம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. அப்போது, ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு நாங்கள் அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள கூட்டுக் கொள்ளையர்களின் நிழல், மேற்கு வங்கம் முழுவதும் படர்ந்துள்ளது. ஒருவர் சொந்தமாக வீடு கட்டுவதாக இருந்தால்கூட மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த கும்பலுக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்று கருதாதீர்கள். பாஜக ஆட்சியை அமைத்துத்தாருங்கள். மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த கும்பலை நாங்கள் தலைகீழாக தொங்கவிட்டு பாடம் புகட்டி சரி செய்வோம்.

ஆசிரியர் நியமன ஊழல், நகராட்சிப் பணியாளர் ஊழல், மாடு கடத்தல் ஊழல், ரேஷன் பொருட்கள் விநியோக ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் என பல நூறு ஊழல்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரங்கேற்றி வருகிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழலில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்.

மேற்கு வங்கத்தின் ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதி அனுப்பியுள்ளார். மேற்கு வங்க கிராமங்களின் வளர்ச்சிக்காக மோடி அனுப்பிய அந்த பணம் முழுவதும் மம்தா பானர்ஜியின் கூட்டுக்கொள்ளைக் கும்பல் வசம் சென்று வீணடிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் செய்த ஊழல்களுக்கு தண்டனையே கிடைக்காது என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இந்த மேடையில் இருந்து நான் சொல்கிறேன், அந்த கூட்டுக்கொள்ளை கும்பலில் தொடர்புடையவர்கள் கொள்ளையடித்த ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும். கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது உறுதி” என தெரிவித்தார்.

“மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா
“இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in