

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் செல்லும்போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நிருபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வருமாறு: அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம்.
அவர்கள் (இந்தியா), அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறார்கள். அவர்கள் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ராவை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பை வாபஸ் பெறுமாறு இந்திய தூதர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அமெரிக்காவின் அறிவுரையால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்திருக்கிறது.
அமெரிக்காவில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற திட்டமிட்டு உள்ளோம். இதன்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.