அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்
குடியேறிகளை ‘வேட்டையாடும்’ திட்டம்: பெரும் சிறை முகாம் ஆகிறதா அமெரிக்கா?
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு முழுவதும் மிகப் பெரிய குடியேற்றத் தடுப்பு முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ‘தி இன்டெர்செப்ட்’ என்ற ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அதன்படி, தற்போது சுமார் 70,000 குடியேறிகள் சிறை முகாம்களில் உள்ளனர். இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஆயிரக்கணக்கானவர்களை தங்க வைக்கும் திறன் கொண்ட பெரிய கிடங்குகளை (warehouses) மாற்றி சிறை முகாம்களை உருவாக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்க உள்துறை பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் குடியேற்ற, சுங்க அமலாக்க நிறுவனம் (ICE) இணைந்து, நாடு முழுவதும் பல தொழிற்துறை கட்டிடங்களை வாங்கி சிறை முகாம்களாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளன.
இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் செலவிடப்படவுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் முழுமையாக செயல்பட்டால், அவை அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய சிறை முகாம்களாக மாறும் அபாயம் இருப்பதாக குடியேற்ற உரிமைகள் ஆதரவாளர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை நாடு முழுவதும் கிடங்குகளைப் பெறுவதற்கும், கிட்டத்தட்ட 1,00,000 படுக்கைகளை மொத்தமாக வைத்திருக்கும் வகையில், அவற்றை மறுசீரமைப்பதற்கும் 38.3 பில்லியன் டாலர்கள் செலவிடவிருக்கிறது.
குறிப்பாக, CoreCivic மற்றும் GEO Group போன்ற தனியார் சிறை நிறுவனங்கள் இந்த திட்டத்தால் பெரிய அளவில் லாபம் அடையும் நிலையில் உள்ளன. முதலீட்டாளர்களுடன் நடந்த கூட்டங்களில், ஐசிஇ (ICE) காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வெளிப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபடும் Palantir Technologies போன்ற நிறுவனங்களும் அரசின் ஒப்பந்தங்கள் மூலம் பலனடையும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சில மாகாணங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மின்னசோட்டாவில் ஐசிஇ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்திருந்தாலும், மொத்த அளவில் நாடு முழுவதும் கைது மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடரும் என நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ‘One Big Beautiful Bill Act’ என்ற சட்டத்தின் மூலம் ஐசிஇ-க்கு பல ஆண்டுகளுக்கு பல்லாயிரம் கோடி டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், குடியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்பை விரிவுபடுத்த அரசுக்கு நிதி பற்றாக்குறை இல்லை என்பது தெளிவாகிறது.
ஆனால், பொருளாதார விளைவுகள் குறித்து கவலை எழுந்துள்ளது. Cato Institute வெளியிட்ட மதிப்பீட்டின்படி, பெருமளவிலான நாடு கடத்தல் திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு டிரில்லியன் டாலர் அளவிலான செலவாக இருக்கலாம். மேலும் American Immigration Council ஆய்வின்படி, குடியேற்றத் தொழிலாளர்கள் குறைவதால் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4% முதல் 7% வரை குறையக்கூடும்.
இதற்கிடையில், சில வணிக நிறுவனங்கள் சமூக அழுத்தத்தால் அரசுடன் கொண்டிருந்த கிடங்கு விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. உதாரணமாக, கனடிய தொழிலதிபர் ஜிம் பாட்டீசனின் (Jim Pattison) நிறுவனம், வெர்ஜீனியாவில் உள்ள பெரிய கிடங்கு விற்பனையை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.
மொத்தத்தில், குடியேற்றக் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் இந்த திட்டம் மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய துறைகளில் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றக் கொள்கைகள் பாதுகாப்பு நடவடிக்கையா அல்லது அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் கடுமையான அடக்குமுறையா என்ற கேள்வி அமெரிக்க அரசியலில் மீண்டும் எழுந்துள்ளது. அதாவது, வெள்ளை நிறவெறி தேசியவாதத்துடன் குரோனி கேப்பிடலிசமும் இணையும் அபாயம் இது என்று அமெரிக்க சமூகவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
