

வாஷிங்டன்: ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டுமென ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தகர்ப்போம் என்று ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுத்தனர்.
வளைகுடா நாடுகளின் குடிநீர் தேவையில் 90% கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. அவற்றை ஏவுகணைகள் மூலம் தகர்ப்போம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த இரு நாட்களாக அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கிறது.
மத்திய கிழக்கின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு வாரம் வரை பேச்சுவார்த்தை நீடிக்கக்கூடும். எனவே ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது. இதுதொடர்பாக அமெரிக்க படைகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை அதிபர் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் பிரதிநிதிகளை நான் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களே பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண அவர்கள் விரும்புகின்றனர். நாங்களும் சுமுக தீர்வை எட்ட விரும்புகிறோம்.
ஈரானை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் மரியாதைமிக்க தலைவர்கள். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை நானும், காமேனிக்கு அடுத்த தலைவரும் இணைந்து நிர்வகிக்கலாம். ஈரானுடனான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்றால் ஒரு வாரத்துக்குள் போர் முடிவுக்கு வரும். இல்லையெனில் ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அரசு மறுப்பு
இதனிடையே ஈரான் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து போரலிருந்து ட்ரம்ப் பின்வாங்குகிறார். கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கவே அதிபர் ட்ரம்ப் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்க இந்த பிராந்திய நாடுகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன. ஆனால் அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் போரை தொடங்கவில்லை. அமெரிக்காவே எங்கள் மீது போர் தொடுத்தது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ரெசாய் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை’’ என்றார்.