

ஈரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் சுமார் 3,200 சரக்கு, எண்ணெய் கப்பல்கள் பரிதவித்து வருகின்றன. இந்த கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல்-கைமா துறைமுகம் அருகே ஒரு சரக்கு கப்பல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது. படம்: ஏஎப்பி
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பிலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, “ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவை ஏற்று அமெரிக்க நேரத்தின் படி ஏப்.13-ம் தேதி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்.13 இரவு 7.30) ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும். இதன்பிறகு ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும். மற்ற நாடுகளின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை தடுக்க மாட்டோம். அவை வழக்கம்போல கடந்து செல்லலாம்.
இவ்வாறு அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறங்களையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்தன. அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி ஈரானில் இருந்து வரும் எந்த கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாது என்று ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரகாம் லிங்கன், ஜெரால்டு ஆர் போர்டு, ட்ரிபோலி உட்பட23 போர்க்கப்பல்கள் மற்றும் 2 நீர்மூழ்கி கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்படும். இவை தவிர 10 கண்காணிப்பு ட்ரோன்கள், கண்காணிப்பு விமானங்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
அமெரிக்க கடற்படையின் 3 கப்பல்கள் ஹார்முஸ் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளன. மேலும் 2 கப்பல்கள் ஜப்பானில் இருந்து ஹார்முஸ் பகுதிக்கு வருகின்றன. அந்த கப்பல்களும் கண்ணி வெடியை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ட்ரம்ப் உத்தரவிட்டால், அடுத்த நொடியே ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த தயாராக இருக்கிறோம்’ என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 96.57 டாலருக்கு விற்கப்பட்டது. ஜலசந்தி மூடலால் நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105 டாலருக்கு விற்கப்பட்டது.
விலை மேலும் உயரும் அபாயம்: ‘‘அமெரிக்கா தனது தடையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் எண்ணெய் விலை பேரலுக்கு 140 முதல் 150 டாலர் வரை உயரக் கூடும். ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பது, ஒரு பிராந்திய மோதலை உலகளாவிய போராகமாற்றக்கூடும். இதன் மூலம் ஒரு நாளுக்கு 12 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம்’’ என்று ஓனிக்ஸ் கேபிடல் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் மான்டேபெக் கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடி விட்டோம்.
எங்களால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஈரான் கப்பல்கள் நுழைந்தால், அவை தகர்க்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ‘‘ஒருவேளை ஈரானுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவது உறுதி செய்யப்பட்டால் சீன பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய கப்பல்களுக்கு.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் ராணுவ தரப்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்லியில் நேற்று கூறும்போது, “இந்திய கப்பல்களுக்கு நாங்கள் சுங்க கட்டணம் வசூலிப்பது கிடையாது. இதை நீங்கள் இந்திய அரசிடமே நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம். இக்கட்டான சூழலிலும் இந்தியா - ஈரான் இடையிலான உறவு வலுவாக இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். ஈரானின் நம்பகமான நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என்று தெரிவித்தார்.
ஈரான் துறைமுகங்களில் இருந்து புறப்படும் எண்ணெய் கப்பல்களை மட்டுமே தடுத்து நிறுத்துவோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. எனவே அங்கிருந்து புறப்படும் இந்திய கப்பல்கள் எவ்வித தடையும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.