

வாஷிங்டன்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பற்றி விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்தினம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14-ம் லியோ பற்றி செய்தியாளர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். தான் போப்பின் ரசிகர் அல்ல என்றும் அவர் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் போப் மிகவும் தாராளவாதி என்றும் தீவிர இடதுசாரிகள் என்று அழைப்பவர்கள் மீது அதிக அனுதாபம் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டினார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் வர்ணனை செய்வதை விடுத்து, போப் தனது ஆன்மிகக் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த விமர்சனம் வெளிவந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தனது படத்தை சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார். அதில் இயேசுவைப் போன்ற தோற்றத்தில் உள்ள அவர், விவிலிய காலத்து அற்புதத்தைச் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தார்.
அந்த படத்தில், அவர் நீண்ட அங்கிகளை அணிந்து, நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதன் மீது தனது கையை வைத்திருப்பது போலவும், பார்வையாளர்கள் மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருக்க அவரது விரல்களிலிருந்து ஒளி வீசுவது போலவும் காட்டப்பட்டிருந்தது. இந்தத் தோற்றம், லாசரஸை இயேசு உயிர்த்தெழுப்பிய விவிலியக் கதையை எதிரொலித்தது.
அப்படத்தைச் சுற்றியுள்ள படங்களில் அமெரிக்கக் கொடிகள், ராணுவ விமானங்கள், பறக்கும் கழுகுகள் மற்றும் வானத்தில் தேவதூதர்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. போப் பற்றிய விமர்சனத்துக்குப் பிறகு இந்தப் படம் வெளியானதால், இது விரைவாக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
முன்னதாக, ஈரானுடனான போர் சர்வ வல்லமை கொண்டவர் என்ற மாயையை உருவாக்கும் முயற்சி என்று போப் 14-ம் லியோ விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், எதிரி நாடுகள் அணு ஆயுதங்களைப் பெறுவதை நியாயப்படுத்தும் ஒரு மதத் தலைவரை விரும்பவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.