

வாஷிங்டனில் உள்ள ஓட்டலில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படை வீரர்கள், அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். (அடுத்த படம்:) துப்பாக்கிச்சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன்கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் மாளிகை பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருந்து வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் உட்பட 2,600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இரவு 8.45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அந்த வளாகத்தில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதிபர் ட்ரம்புக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீஸார் (கேட்) விரைந்து செயல்பட்டு, ட்ரம்பை சுற்றி அரண் அமைத்து அவரைப் பாதுகாப்பாக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். துணை அதிபர் வான்ஸும்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர் பகுதிநேர ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன் (31) என்பது தெரியவந்தது. இது குறித்து எஃப்பிஐ போலீஸார் கூறியதாவது: விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன் தங்கியுள்ளார். விருந்து நடைபெறும்போது அவர் திடீரென உள்ளே புகுந்து 7 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்பிடம் இருந்து சுமார் 150 அடி தொலைவில் அவரை மடக்கிப் பிடித்தோம். அவரது பெற்றோர் வீடு மற்றும் அவரோடு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தி உள்ளோம். எதற்காக தாக்குதல் நடத்தினார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஏராளமான கத்திகளை பறிமுதல் செய்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியதாவது: முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதே பாணியில் என்னையும் கொல்ல முயற்சி நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பென்சில்வேனியா பகுதி பிரச்சாரக் கூட்டத்தில் என்னைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
தற்போது மீண்டும் ஒரு கொலை முயற்சி அரங்கேறி உள்ளது. விரைந்து செயல்பட்டு என்னை பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரியுடன் செல்போனில் பேசினேன். ரத்து செய்யப்பட்ட விருந்துநிகழ்ச்சி அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
கோல் தாமஸ் ஆலன் யார்? - கலிபோர்னியா மாகாணம், டொரன்ஸ் நகரை சேர்ந்த கோல் தாமஸ் ஆலன், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் இளநிலை பட்டமும், கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் பெற்றவர். சி2 எஜுகேஷன் என்ற கல்வி நிறுவனத்தில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிசம்பரில் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு எந்தவொரு குற்ற வழக்கிலும் இவர் சிக்கியது இல்லை. முதல் முறையாக இவர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. தாக்குதல் பின்னணியிலும் இவரை தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. தனி நபராக செயல்பட்டு உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: வாஷிங்டன் டிசி ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து மிகுந்த மனநிம்மதி அடைந்தேன். அவர்கள் பாதுகாப்பாக வும், நலமாகவும் இருக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. அதிபர் ட்ரம்ப் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.