

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு தினங்களில் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகியிருப்பதால் சத்தியமூர்த்தி பவன் அனல் தகிக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியிலேயே நிறைவடைந்துவிட்டது. அழகிரி மீது ஏராளமான புகார்கள் தலைமைக்கு சென்றபோதும், அகில இந்திய தலைமையில் நிலவிய குழப்பத்தால் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே சிபாரிசில் கடந்த 2024-ல் தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டார், செல்வப்பெருந்தகை.
தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக மிகக்குறுகிய காலத்திலேயே சத்தியமூர்த்தி பவனில் இருந்து டெல்லிக்கு புகார்கள் பறக்க தொடங்கின. ஆனாலும் கார்கேவின் ஆதரவு இருந்ததால் அவரது பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகையை மாற்ற அகில இந்திய தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார்.
ராகுல் காந்தி வருத்தம்: ஆனால் ப.சிதம்பரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவந்து, வெறும் 28 இடங்களுக்கு அகில இந்திய தலைமையை ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதில் ராகுல் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய வருத்தம் உண்டு. தொடர்ந்து வேட்பாளர் தேர்விலும் தனது ஆதரவாளர்களுக்கே செல்வப்பெருந்தகை முக்கியத்துவம் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. இதன் உச்சமாக, வேட்பாளர்கள் தேர்வில் ‘பணம் விளையாடியதாக’ முன்னாள் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கொடுத்த அதிரடி பேட்டி டெல்லி மேலிடத்தை முகம் சுளிக்க வைத்தது.
மேலும், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது என செல்வப்பெருந்தகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் புதிய தலைவரை நியமிக்க டெல்லி முடிவுக்கு வந்திருக்கிறது. இதைப் புரிந்துகொண்டே, சமீபத்தில் ‘தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்’ என செல்வப்பெருந்தகை பேட்டியளித்திருந்தார்.
தற்போது தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ் அழகிரி, தங்கபாலு போன்றவர்களும் வாய்ப்பை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
காங். தலைமை உறுதி: ஆனால். ஏற்கெனவே மாநிலத் தலைவர் பதவியில் இல்லாத புதியவர்களை நியமிக்கவே டெல்லி தலைமை விரும்புகிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிகவும் உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.