

லண்டன்: கோலியும், ரோஹித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பலம் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டி20 தொடரின் தோல்வி நிச்சயம் இந்த தொடரில் எதிரொலிக்காது என்று கருதுகிறேன். இது முற்றிலும் மாறுபட்ட பார்மெட், அணி. இதன் சூழல், இலக்கு என அனைத்தும் மாறுபடுகிறது.
எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு இந்த தொடர் உதவும் என கருதுகிறேன். ஏனெனில், இங்குள்ள ஆடுகளங்கள் தென் ஆப்ரிக்காவில் உள்ளது போல் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் சரியான அணி சேர்க்கையை நிச்சயம் முயற்சிப்போம்.
அணியில் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதனால் மாற்று வீரர்களை பரிசீலிக்கிறோம்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அனுபவம் மதிப்புமிக்கது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அவர்கள் இருவரும் பலமாக திகழ்கின்றனர் என்றார்.