அமெரிக்க இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு: ட்ரம்ப் அறிவிப்பு
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவின் இறக்குமதி வரிகளை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் அமெரிக்காவைச் சுரண்டி வருவதாகவும், இந்த வரி உயர்வு அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 சதவீத வரியை விதித்து உத்தரவிட்ட ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதனை 15 சதவீதமாக உயர்த்தி உலக நாடுகளை அதிரவைத்துள்ளார். 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “வரிகள் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் முற்றிலும் அமெரிக்காவிற்கு எதிரான முடிவை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அமெரிக்க அதிபரான நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

பல தசாப்தங்களாகத் தண்டனையின்றி அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவிற்கு உடனடியாக உயர்த்துவதாக இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரிகளைத் தீர்மானித்து வெளியிடுவோம்.

இது அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்றும். எங்களது மகத்தான வெற்றிகரமான செயல்முறையை முன்பை விட இன்னும் வலிமையாகத் தொடரச் செய்யும்" என்று கூறியுள்ளார். இந்த வரி உயர்வின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்துகள் மற்றும் ஆடைத் தொழில்கள் கூடுதல் சுமையைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைக்காமல், ஒட்டுமொத்த இறக்குமதியையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் இந்தப் புதிய வரிக் கொள்கை அமலுக்கு வரும்போது, கார் மற்றும் மின்னணுப் பொருட்களின் விலை உலக அளவில் உயரக்கூடும். இது ஒருபுறம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று ட்ரம்ப் கூறினாலும், நுகர்வோர் மீதான விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய நிலைத்தன்மை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் வாரங்களில் இது தொடர்பாகப் பிற நாடுகள் எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்கும்.

அமெரிக்க இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு: ட்ரம்ப் அறிவிப்பு
ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற இந்திய வழக்கறிஞர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in