

இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரான் ஏவுகணை மீது எழுதப்பட்டுள்ள வாசகம்.
டெஹ்ரான்: ஈரான் ராணுவ ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் போரில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்திய அரசு சமரச முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி ஏவுகணை தாக்கியது. இதில் 87 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் நின்றிருந்த 3 ஈரான் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து மருந்துகள், நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஈரான் மக்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கி வருகின்றனர். போருக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் இருமுறை முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் அன்பு, மனிதநேயத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்திய மக்களின் அன்புக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஈரானின் ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. மேலும் ஈரானுக்கு எதிரான போரில் ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டன. இதன்காரணமாக ஈரான் ஏவுகணைகளில் ஸ்பெயின், ஜெர்மனி மக்களுக்கு நன்றி என்ற வாசகங்களும் எழுதப்பட்டு உள்ளன. அதோடு பாகிஸ்தானுக்கும் ஈரான் அரசு நன்றி தெரிவித்திருக்கிறது.