

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டாக்கா திரும்பினார். குண்டு துளைக்காத பேருந்தில் வரும் அவர், பிஎன்பி கட்சித் தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.படம்: பிடிஐ
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுஉள்ளது. அங்கு பிப்.12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி (என்சிபி), அடிப்படைவாத கட்சியான ஜமாத் - இ – இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமரும், பிஎன்பி கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கலீதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் பிரிட்டனில் இருந்து நேற்று வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு திரும்பினார்.
அவாமி லீக் கட்சி கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய வழக்கில் கடந்த 2004-ம் ஆண்டில் தாரிக் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு அவர் மீது 84 ஊழல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகளில் அடுத்தடுத்து தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ரகசியமாக உடன்பாடு செய்துகொண்ட தாரிக் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் விடுதலையானார். அதே ஆண்டு செப்டம்பரில் மனைவி, குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அவர் குடியேறினார். சுமார் 17 ஆண்டுகள் அரசியல் துறவறம்
பூண்டிருந்த அவர் மீண்டும் வங்கதேச அரசியலில் கால் பதிக்கிறார். வரும் பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறங்குகிறார்.
டாக்கா விமான நிலையத்தில் நேற்று லட்சக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர். அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்துள்ளனர். குண்டுதுளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். டாக்கா திரும்பிய பிறகு, தாரிக் ரஹ்மான், இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, போதிய பாதுகாப்பு வழங்கியதற்காக அவர் யூனுஸுக்கு நன்றி தெரிவித்தார்.
பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தலில் ஹசீனாவின் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பிஎன்பி வெற்றிபெற்று கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாகஅரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்து இளைஞர் கொலை: இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர் ராஜ்பரி நகருக்கு அருகே உள்ள ஹோசென்டங்கா கிராமத்தை சேர்ந்த அம்ரித் மொண்டல் (எ) சாம்ராட் (29) என தெரியவந்துள்ளது. சாம்ராட் மற்றும் சிலர் சேர்ந்துஒரு வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி, அவரை சரமாரியாக தாக்கிஉள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.